தான் பெற்ற விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு..! | சதீஸ்

 தான் பெற்ற விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு..! | சதீஸ்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் பெற்ற அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய கோரி கோரிக்கை முன்வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வலியுறுத்தினர். பிரிஜ் பூஷண் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவருக்கு நெருங்கியவரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

எனவே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார். எனவே புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது விருதுகளை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ்க்கையை வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாகிவிடக் கூடாது என்பதால் நான் வாங்கிய விருதுகளை திரும்ப அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...