கால், அரை, முக்கால், முழுசு | 13 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு | 13 | காலச்சக்கரம் நரசிம்மா

13. ஏஞ்சல் வந்தாளே..!

தர்ஷ் தனது அறையில், நெட்பிளிக்ஸில் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்க, நண்பர்கள் தினேஷ், கார்த்திக் மற்றும் ரேயான் அவனது அறைக்குள் நுழைந்தனர்.

என்னடா..! யாரும் தூங்கலியா..?” —வியப்புடன் டிவி ரிமோட்டை எடுத்து டிவியை மியூட் செய்தான்.

எப்படிடாதூக்கம் வரும்..? மாடியிலே இருக்கிற அல்லி ராணி வெடிகுண்டு ஒன்றை வீசிட்டுப் போயிட்டாளே..! நம்மளை அவ பேசாம போலீஸ்லேயே பிடிச்சு கொடுத்திருக்கலாம். அதைவிடப் பெரிய தண்டனையா, நம்ம நாலு பேருல ஒருத்தனைக் காதலிக்கிறேன்னு இல்லே சொல்லிட்டு போய்ட்டாள்..! நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்..!” —கார்த்திக் சொன்னான்.

சே..சே..! அவள் சொன்னதையா சீரியஸா எடுத்துக்கிட்டு இருக்கீங்க..? நமக்குள்ளே அவள் டிவைட் அண்ட் ரூல் செஞ்சு நம்ம நாலு பேரையும் பிரிக்கப் பார்க்கிறா. இப்பதான் நம்ம டார்க் டெமான்ஸ் யூனைடெடா இருக்கணும். நம்மள்ல ஒருத்தனை அவள் காதலிக்கிறாள்னு தெரிஞ்சா நமக்குள்ள சண்டை போட்டுப் பிரிவோம்னு நினைக்கிறாள். அதுக்கு நாம இடமே கொடுக்க கூடாது..! மை மித்ரோன்..! நாம ஒற்றுமையா இருக்கணும்..! என்னைப் பத்திக் கவலை இல்லே. நான் எந்தப் பெண்ணோட காதல் வலையிலேயும் சிக்க மாட்டேன். பட், நீங்க மூணு பேரும் ஜாக்கிரதையா இருங்க. அவள் உங்கள்ல ஒருத்தனைக்கூடக் குறி வச்சிருக்கலாம். நீங்க மூணு பேரும்தான் கல்யாணக் கனவுகளைக் கண்டுக்கிட்டு இருக்கீங்க..!

எங்களை நீ என்ன அவ்வளவு சீப்பா எடை போட்டுட்டே..? என்னோட பாலிசியில் எந்த மாற்றமும் இல்லே..! ஐஸ்வர்யா ராய்யை விட அழகான பெண்ணைத்தான் நான் கல்யாணம் செஞ்சுப்பேன். கங்கணாவைப் பார்த்தா எனக்கு எப்படிக் காதல் வரும்..? எப்பப் பார்த்தாலும் மம்தா பானர்ஜி மாதிரி மூஞ்சிய உர்ருனு வச்சிருக்கா.”

வெல்செட்..! நான் மட்டும் என்ன..? கங்கணா ஐ லவ் யுன்னு சொன்னா உடனே மயங்கிடுவேனா என்ன..? பெரிய கோடீஸ்வரியத்தான் நான் கல்யாணம் கட்டிப்பேன்..! தினமும் ஓரு ஐநூறு ரூபாயை ரெண்டு பக்கமும் ஓட்டை செஞ்சு அதை கோவிட் மாஸ்கா உபயோகப்படுத்துவேன். கெய்வியா இருந்தா கூட கட்டிப்பேன். போயும் போயும் கங்கானாவைப் போய் கல்யாணம் கட்டுவேனா..? என்கிட்டே வந்து ‘ஐ லவ் யுஅப்படி இப்படினு சொன்னால், கன்னத்துல ஓங்கி ஒரு அறை கொடுப்பேன்.” —தினேஷ் சொல்ல, ரேயான் சிரித்தான்.

அவளை எல்லாம் நான் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன்..! கங்கணா எல்லாம் என் ரேஞ்ஜ் கிடையாது.” —ரேயான் அலட்சியமாகச் சொன்னான்.

நீ திரும்பிப் பார்க்க மாட்டே..! ஆனா உங்கப்பன் திரும்பிப் பார்த்து, உனக்கு சித்தியா அவ வந்துட்டா என்ன செய்வே..?” —கார்த்திக் கூறியதும், பேய் அறைந்தது போல மாறியது, ரேயான் முகம்.

எங்கப்பன் நிச்சயம் செய்வான்..!” –ரேயான் கூறினான்.

எல்லாம் சரி..! அவள் உன்னை லவ் பண்ணாநீ என்ன செய்வே..?” —தினேஷ், ஆதர்ஷைப் பார்த்துக் கேட்க, ஆதர்ஷ் தலையசைத்தான்.

நோ சான்ஸ்..! அவளால என்னை நெருங்கவே முடியாது. நான் சொல்றதைக் கேளுங்க..! எந்தப் பெண்ணும், உங்க நாலு பேருல ஒருத்தனை நான் லவ் பண்றேன்னு சொல்லவே மாட்டாள்..! உண்மையிலேயே அவ நம்ம நாலு பேருல ஒருத்தனை லவ் செஞ்சா, அவன் கிட்டே ரகசியமாத்தான் தனது மனசை திறந்து காட்டுவாள்..! அதனால, அவ நம்மைக் குழப்பப் பார்க்கிறாள். நீங்க மூணு பேரும் அவ கிட்டே ஏமாந்துடாதீங்க.!” —ஆதர்ஷ் எச்சரித்தான்.

சரியாக ‘பிங்’ என்று ஒலி ஆதர்ஷின் செல்போனில் இருந்து வந்தது. ஏதோ மெசேஜ் ஒன்று வந்திருந்தது.

அவன் டேபிள் மீது இருந்த தனது மொபைலை எடுக்கச் செல்ல, தொடர்ந்து பிங் பிங் பிங் என்று மற்ற மூவரின் போனிலும் சத்தம் கேட்டது. மூவரும் தத்தம் மொபைல்களை வியப்புடன் கையில் எடுத்தனர்.

ஹை டார்க் டெமன்ஸ்,

கும்கி யானையை வச்சு மத்த யானையை பிடிக்கிறா மாதிரி, உங்களுல ஒருத்தனை லவ் பண்ணிக் கல்யாணம் செஞ்சுகிட்டு, மத்த மூவரையும் நான் கார்னர் செய்ய போறேன். நீங்க நாலு பேரும், இனி நிம்மதியா வாழவே முடியாது. இனி பெண்களைத் தரக்குறைவா பேச மாட்டோம்னு நீங்க போகிற வர்ற பெண்களோட கால்ல விழுந்து கதற வைக்கிறேன். உங்கள்ல ஒருத்தன் எனக்கு பலியாகத் தயாரா இருங்க. எச்சரிக்கை..! ஆல் தி பெஸ்ட்..!

இப்படிக்கு. கருப்பு அசுரர்களை வெல்ல வந்த ஃபேர் ஏஞ்சல்ஸ் (வெண்மை தேவதைகள்)

உறைந்து போயினர் நால்வரும்..!

என்னடா ஆதர்ஷ்..! நாலு பேருக்கும் ஒரே மாதிரி மெசேஜ் வந்திருக்கு. நம்பர் புதுசா இருக்கு..?” —கார்த்திக் அரண்டு போயிருந்தான்.

இரு..! அந்த நம்பருக்கு போன் செஞ்சு சுளுக்கு எடுக்கறேன்.!” ஆதர்ஷ் எரிச்சலுடன், அந்த நம்பருக்குப் போன் செய்ய முயன்றான்.

பிங்க்..!மீண்டும் நான்கு பேர் மொபைலுக்கும் மெசேஜ் வந்தது.

எனது மெசேஜைப் பார்த்துவிட்டு, யார் எனக்கு முதலில் போன் செய்கிறானோ, அவனே என் கணவன்..! என் கழுத்துல தாலி கட்டப்போகிறவன்.” —மெசேஜ் அறிவிக்க, பதற்றத்துடன் செல்போனை ஆஃப் செய்தான், ஆதர்ஷ்.

யாருடாஅந்த ஃபேர் ஏஞ்சல்ஸ்..? நாம கருப்பு அசுரர்கள்னு பெயரை வச்சுக்கிட்டா, அவள் வெள்ளை தேவதைகள்னு பெயரை வச்சுக்கிறாள். நிச்சயம் இது சஞ்சனாவும், கங்கணாவும் செய்யற அச்சுறுத்தல் வேலைங்கதான்..! நாம டார்க் டெமான்ஸ்ன்னு பெயரை வைச்சதை அவங்க எப்படியோ கண்டுபிடிச்சு, வெள்ளை தேவதைகள்ங்கிற பெயர்ல நமக்கு மெசேஜ் அனுப்பறாங்க. அவங்களை இக்னோர் செய்யுங்க. ஆனால் மனசுல ஒரு சபதத்தை செஞ்சுக்கங்க.!” —ஆதர்ஷ் கூறினான்.

என்ன சபதம்..?” —கார்த்திக் கேட்டான்.

தப்பி தவறி நீங்க மூணு பேரும் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டால் கூட, உங்க எதிர்கால மனைவியா அந்த கங்கணாவை சூஸ் செய்யாதீங்க. நான் அவள் கிட்டே சிக்க மாட்டேன். நீங்க மூணு பேரும் அவள் கிட்டே ஜாக்கிரதையா இருங்க. நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன். நம்ம நாலு போரையும் கதற வைக்கிறேன்னு கங்கணா சபதம் செஞ்சிருக்கா. எனவே நம்ம நாலு பேருல ஒருத்தன் அவள் கிட்டே சிக்கினால்கூட, நம்ம நாலு பேருக்கும் அவமானம். பேசாம, நீங்க மூணு பேரும் உங்களுக்கு ஏத்த பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சுக்கங்க. உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டா, அவளுக்கு பெரிய தோல்வி..!ஸோடேக் கேர் பாய்ஸ்.” —ஆதர்ஷ் சொன்னான்.

நீ கவலையேபடாதே, ஆதர்ஷ்..! நிச்சயம் அந்த மாத்ருபூதத்தைதான் அந்த கங்கணா கல்யாணம் செஞ்சுப்பா..! அவளுக்கு அவரை மாதிரிக் கிழவன்தான் கிடைப்பான். நாங்க மூணு பேரும் எங்களை அந்த கங்கணா மயக்கப் பார்த்தாலும், நாங்க மசிய மாட்டோம்..! எங்களுக்கு ஏத்த பொண்ணை நாங்க சீக்கிரமே தேடிப் பிடிக்கிறோம்.” —கார்த்திக் சொன்னான்.

தட்ஸ் தி ஸ்பிரிட்..! நீங்க எல்லோரும் கங்கணாவை விட, அழகா, பணக்காரியா புத்திசாலியா, பண்புள்ள பெண்ணா பார்த்துக் கல்யாணம் செஞ்சுக்கங்க. கல்யாணத்துக்கும் அவளைக் கூப்பிடுங்க. நீங்க சந்தோஷமா வாழறதைப் பார்த்து அவள் வயிறு எரிஞ்சு திரும்பி மைசூருக்கே ஓடிப்போகணும்..!” —ஆதர்ஷ் சொன்னான்.

நீயும் எங்களை மாதிரி கல்யாணம் கட்டிக்கிட்டு குடியும் குடித்தனமுமா இருந்ததால், கங்கணாவுக்குப் பெரிய தோல்வி கிடைக்கும். அதனால நீயும் அவசியம் கல்யாணம் செஞ்சுக்கணும் ஆதர்ஷ்..!” —தினேஷ் சொன்னான்.

என் பாலிசி, நான் பெண்களை வெறுக்கிறவன். ஆனா கங்கணா என்கிட்டே வந்து ஐ லவ் யு சொன்னால், அடுத்த நிமிஷமே நான் கல்யாணம் செஞ்சுப்பேன்..!” —ஆதர்ஷ் சொன்னான்.

யாரு..? கங்கணாவையா..?” —அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர் மற்ற மூவரும்.

கங்கணா என்கிட்டே ஐ லவ் யு சொன்னால், அடுத்த நிமிஷமே, எனக்கு அடங்கி நடக்கிறவளா ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து, இவள்தான் என்னோட மனைவி..! உன்னை விட, எல்லா வகையிலேயும் உயர்ந்தவளாத்தான் நான் கல்யாணம் செஞ்சுகிட்டு இருக்கேன்னு கங்கணா கிட்டே சொல்லணும். அதுக்காகவே நான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு யோசிக்கிறேன்..!” —வன்மத்துடன் கூறினான் ஆதர்ஷ்.

”HURRAY..!நண்பர்கள் மூவரும், கைகளைக் குலுக்கிக் கொண்டனர்.

சூப்பர்..! நாம நாலு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இன்று போல என்னைக்கும் இப்படியே ஜாலியா ஒற்றுமையா இருக்கணும். நம்ம மனைவிமார்கள் முயற்சி செஞ்சால்கூட, நாம் பிரிய கூடாது..!” —கார்த்திக் சொன்னான்.

இப்ப இந்த ஃபேர் ஏஞ்சல்சுக்கு என்ன பதில் அனுப்பறது..?” —ரேயான் கேட்டான்.

நாலு பேரும் ‘கோ டு ஹெல்’ன்னு பதில் அனுப்பிட்டு தூங்கப் போகலாம்..!” —கார்த்திக் சொல்ல, கோ டு ஹெல்..!மெசேஜ் ஒன்றை நால்வரும் அனுப்பினர்.

அப்போது

‘கிர்ர்’ என்று அவர்கள் பிளாட்டின் பஸ்ஸர் ஒலித்தது. திடுக்கிட்டு, செல்போனில் மணியைப் பார்த்தனர்.

இரவு மணி இரண்டு..!

இந்த வேளையில் யார் பஸ்ஸரை அழுத்துகிறார்கள்..?

குழப்பத்துடன் ரேயான், சென்று, பிளாட் கதவின் மாஜிக் ஹோல் வழியாக வெளியே பார்த்தான்.

மங்கலான ட்யூப் லைட் ஒளியில், வெளியே ஓர் பெண் தலையை விரித்துப் போட்டுகொண்டு நின்றிருந்தாள்.

ரேயானின் பிடரியில் மயிர்க்கூச்சம் எடுத்தது.

வெளியே தலையை விரித்துப் போட்டுகொண்டு ஒரு பெண் நிற்கிறாள்..!” —ரேயான் கூற, மற்ற மூவரும் அவனைத் திகைப்புடன் பார்த்தனர்.

–கலகலப்பு தொடரும்…

ganesh

2 Comments

  • அட்டகாசமாப் போவுது தொடர்! வாழ்த்துகள்!

  • Where is the 12th episode?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...