2024 ன்‘PEN Pinter Prize’ விருது பிரபல எழுத்தாளர் ‘அருந்ததி ராய்க்கு’ அறிவிப்பு..!

 2024 ன்‘PEN Pinter Prize’ விருது பிரபல எழுத்தாளர் ‘அருந்ததி ராய்க்கு’ அறிவிப்பு..!

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சமகால எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் அருந்ததி ராய்.  இவர் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தந்தைக்கும் கேரளாவைச் சார்ந்த தாய்க்கும் மகளாக பிறந்தவர்.  இவரது பெற்றோர் இருவரும் மேகாலயாவில் உள்ள டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும்போது காதல் திருமணம் செய்து கொண்டனர்.

அருந்ததி ராய் – முற்போக்கு இந்தியப்பெண் முகங்களில் ஒருவராக அறியப்படுகிறார். எழுத்தாளர்,  சமூக சேவகர்,  அணு உலை எதிர்ப்பாளர்,  அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் என பல முகங்கள் கொண்டவர்.  இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசு வென்றவர். இன்றளவும் இவரின் ‘காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ விறுவிறுப்பான விற்பனையில் உள்ளது.

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்களான மாவோயிஸ்ட்களை சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் காடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களது அரசியல்,  வாழ்வு மற்றும் நகர்வுகள் குறித்த  “தோழர்களுடன் ஒரு பயணம்” எனும் பெயரில் புத்தகமாக எழுதி அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.

அதேபோல நொறுங்கிய குடியரசு எனும் பெயரில் அவர் எழுதிய புத்தகம் காஷ்மீரின் அரசியல் குறித்து விரிவாக பேசுகிறது.  மேலும் பெருமகிழ்வின் பேரவை மற்றும் ஆசாதி உள்ளிட்ட புத்தகங்கள் இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் வாசகர்களால் கவனம் பெற்ற புத்தகங்கள் ஆகும்.

டெல்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய்,  முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோா் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க டெல்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பரிசு நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரோல்ட் பின்டரின் நினைவாக  ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.  அக்டோபர் 10 ஆம் தேதி பிரிட்டிஷ் லைப்ரரி இணைந்து நடத்தும் இந்த விழாவில் அருந்ததி ராய் விருதைப் பெற்றுக் கொண்டு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெண் பிண்டர் விருதின் ஜூரிக்களில் ஒருவரான ருத் போர்த்விக் தெரிவித்ததாவது..

“ 2024 ஆம் ஆண்டிற்கான  PEN பின்டர் பரிசை வென்ற அருந்ததி ராய்க்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  அருந்ததி ராய் முக்கியமான  கதைகளை புத்திசாலித்தனம் மற்றும் அழகுடன் கூறக் கூடிய எழுத்தாளர் ஆவார்.  இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில் அவரது சக்தி வாய்ந்த குரல் அமைதியாக இருக்கக்கூடாது,’ என்று போர்த்விக் கூறினார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...