டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

 டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

நாடாளுமன்ற மக்களவையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, INDIA கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிலான தனிப்பெருன்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு முறை போன்று அல்லாமல், பாஜக இந்த முறை ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை நாட வேண்டியுள்ளது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரின் ஆதரவும் பாஜகவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இதனிடையே, நேற்று (ஜூன் 5) நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். அதோடு, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க அவர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று மாலை INDIA கூட்டணியின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த சூழலில், சந்திரபாபு நாயுடுவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு நடுவில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தேன். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். தென்மாநில நலன்களுக்காகவும், நமது உரிமைக்காகவும்,  மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் சந்திரபாபு நாயுடு உறுதியாக வாதிடுவார் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...