‘கேரளா’ இனி “கேரளம்” சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!

 ‘கேரளா’ இனி “கேரளம்” சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மலையாளத்தில் கேரளம் என்பது பொதுவாக வழக்கத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், ஆவணங்களில் குறிப்பாக ஆங்கிலத்தில் கேரளா என குறிப்பிடப்படுகிறது. எனவே, மாநிலத்தின் பெயரை மலையாள வழக்கப்படி கேரளம் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மாநில அரசு, பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், “மலையாளத்தில் நம் மாநிலத்தின் பெயர் கேரளம். 1956, நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நவம்பர் 1ம் தேதி கேரள தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்றுபட்ட கேரளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்தே மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை கேரளா என குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ், மாநிலத்தின் பெயரை கேரளம் என திருத்தம் செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதேபோல் மாநிலத்தின் பெயரை மாற்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...