எழுத்தாளர் ‘தேவி பாரதி’ எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது | சதீஸ்

 எழுத்தாளர் ‘தேவி பாரதி’ எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது | சதீஸ்

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 24 மொழிகளில் வெளியாகும் தலை சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படைப்புகள் மொழி வாரியாக தேர்வு செய்யப்பட்டு விருதும், பரிசுத் தொகையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும்.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில் எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழவில் விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

நீர்வழிப் படூஉம் நாவலை எழுதிய எழுத்தாளர் தேவி பாரதியை பொறுத்தவரை ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை பூர்வீகமாக கொண்டவர். இவரது இயற்பெயர் ராஜசேகரன் என்பதும் தேவி பாரதி என்ற பெயரில் பல படைப்புகளை இவர் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிழலின் தனிமை, நொய்யல் , அற்ற குளத்து அற்புத மீன்கள், உள்ளிட்ட நூல்களை தேவி பாரதி எழுதியுள்ளார். இவைகளை தவிர இன்னும் பல படைப்புகளை கடந்த 45 ஆண்டுகளாக எழுதி வருகிறார்.

இதனிடையே தனது நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது செய்தியாளர்களிடம் பேசிய எழுத்தாளர் தேவி பாரதி, தனது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.மேலும், சாகித்ய அகாடமி விருது இன்னும் தனக்கு உத்வேகத்தை தரும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழில் தேவி பாரதியை போல் மலையாளர்த்தில் இ.வி.ராமகிருஷ்ணனுக்கும், தெலுங்கில் பதஞ்சலி சாஸ்திரிக்கும், கன்னடத்தில் லட்சுமிஷா தொல்பதிக்கும், இந்தியில் சஞ்சீவுக்கு சாக்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழிப் படூஉம் நாவல் ஆசிரியர் எழுத்தாளர் தேவி பாரதிக்கு இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...