லிபியா நாட்டில்  வெள்ளம் 2000 பேர் பலி!

 லிபியா நாட்டில்  வெள்ளம் 2000 பேர் பலி!

லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு.. அங்கே வெறும் 67.4 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.

இதற்கிடையே இந்த லிபியாவில் இப்போது மிக பெரிளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளை இந்த கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால் டெர்னா நகரில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் குறைந்தது 2,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணிகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாகக் கிழக்கு லிபியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லிபிய தேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மிஸ்மாரி கூறுகையில், “டெர்னா நகரம் பேரழிவைச் சந்தித்துள்ளது.. அங்குள்ள அணைகள் இடிந்த நிலையில், அங்குப் பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தால் 5,000-6,000 பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களைத் தேடும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அங்கே எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு மக மோசமாக இருக்கும் நிலையில், சர்வதேச நாடுகளின் உதவியை லிபியா கோரியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “டெர்னாவில் நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது. அங்கே பல வீடுகள் அப்படியே சரிந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் அணை உடைந்ததாகவே தெரிகிறது. இரவு தூங்கிய போது கனமழை மட்டுமே இருந்தது. ஆனால், காலை எழுந்து பார்க்கும் போது வீடு முழுக்க தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது. வீடுகளை விட்டு வெளியே வரவே கடும் சிரமம் இருந்தது. பல இடங்களில் 10 மீட்டர் வரை நீர் இருந்தது” என்றார்.

டெர்னாவின் மேற்கில் பாதிப்புகள் ரொம்பவே மோசமாக இருக்கிறது. அங்குக் கட்டிடங்கள் அனைத்தும் நீரால் சூழ்ந்துள்ளது. யுனெஸ்கோவின் பட்டியலிடப்பட்ட தளமான சைரீன் இருக்கும் சூஸ் மற்றும் ஷாஹத் நகரங்களிலும் பாதிப்பு மிக மிக மோசமாக இருக்கிறது. பாதிப்பு மிக மோசமாக இருக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் மூன்று நாட்கள் துக்கத்தை அறிவித்துள்ளது. லிபியாவில் உள்ள நான்கு முக்கிய எண்ணெய் எடுக்கும் பகுதிகளான ராஸ் லானூஃப், ஜூயிடினா, பிரேகா மற்றும் எஸ் சித்ரா ஆகியவை கனமழையால் சனிக்கிழமை மாலை மூடப்பட்டே இருக்கிறது. பாதிப்புகள் மோசமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...