காடுவெட்டி குருவின் வாழ்க்கை ’மாவீரா’ படமாகிறது…

கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றித் திரைப்படங்களுக்குப் பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படம் ‘மாவீரா’. படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் கௌதமன். எழுத்தாளர் நீலம் பத்மநாபன் எழுதிய ‘தலைமுறைகள்’ நாவலை ‘மகிழ்ச்சி’ என்ற திரைப்படமாகவும், மக்கள் டி.வி.யில் சந்தன வீரப்பனின் வரலாற்றை ‘சந்தனக்காடு’ எனும் நெடுந்தொடராகவும் எடுத்துப் புகழ்பெற்றவர் கௌதமன்.

இயக்குநர் வ.கௌதமன்

உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இயக்கிவரும் வ.கௌதமன் மண்ணையும் பெண்ணையும் மானத்தையும் காத்து வாழ்ந்த ஒரு முந்திரிக்கட்டு மாவீரன் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘மாவீரா’வை எடுத்து வருகிறார். இந்தப் படம் கிரௌட் பன்ட் மூலம் உருவாகிவருகிறது.

“எதிரியைக் கொல்லணும் என்று நினைப்பதைவிட அவன் மனதை வெல்லணும் என்கிற இலக்கோடு இப்படைப்பு இருக்கும்” என நம்பிக்கை தரும் இயக்குநர் “அதே நேரத்தில், கேட்பார் எவருமில்லை என்கிற தீய எண்ணத்தோடு எவர் வரினும் அத்துமீறினால் யுத்தம்” என்கிற பிரகடனத்தையும் ‘மாவீரா’ பேசும்” என்கிறார்.

பரபரப்பான சம்பவங்களோடு ஆக்சன் கலந்து அதிரடியாக உருவாகும் ‘மாவீரா’விற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, சண்டைப் பயிற்சி ‘ஸ்டண்ட்’ சில்வா, நடனம் தினேஷ், மற்றும் முன்னணித் தொழிநுட்பக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

வி.கே புரடக்சன் குழுமம் முதன்முறையாக தயாரிக்கும் இப்படைப்பில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகையர்கள் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!