பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சந்திப்பு..!

 பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சந்திப்பு..!

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.

சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

பிரதமர் உடனான சந்திப்பின்போது கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்தும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.  மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்ட பிறகு நேற்று  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய நிலையில் இன்று கேரள மாநில ஆளுநர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...