“பானை சின்னம்” மறுப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்..!

 “பானை சின்னம்” மறுப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்..!

மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல் செய்ய உள்ளதாக  விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.
ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

“தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை, ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படும் காரணம் ஏற்புடையதாக இல்லை. பாஜகவை ஆதரிக்கின்ற கட்சிகளுக்கு சில நிமிடங்களில் சின்னங்களை ஒதுக்குகின்றார்கள்.பாஜகவை எதிர்த்து அரசியல் செய்கின்ற கட்சிகளுக்கு தனிச் சின்னம் பொதுச் சின்னம் ஒதுக்குவதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக செயல்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம்.  மனு கொடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 21ஆம் தேதியிட்ட கடிதம் கடந்த 25ஆம் தேதி எங்களுக்கு கிடைத்தது.

அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படும் காரணம் கடந்த தேர்தலில், நீங்கள் ஒரு சதவீத வாக்குகள் பெறவில்லை என்றும் எனவே உங்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் அது உண்மை இல்லை கடந்த 2019 நான் போட்டியிட்ட பானை சின்னத்தில் 1.5% வாக்குகள் பெற்றுள்ளேன்.

பானை சின்னத்தைக் கேட்டு இந்திய அளவில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. யாருக்கும் ஒதுக்கவில்லை. இது தொடர்பாக  நீதிமன்றத்திலேயே நீதியரசர் எதற்காக சின்னத்தை நீங்கள் ஒதுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதன் பிறகு மாலை 5 மணிக்குள் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் 5 மணி அளவில் மீண்டும் அதே காரணத்தை சுட்டிக்காட்டி கணக்கு வழக்கு ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக தங்களது வழக்கறிஞர்கள் நாளை மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்பதை வாதிட உள்ளார்.

இதையடுத்து, பானை சின்னம் கிடைக்கவில்லை என்றால் வேறு எந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு என்ற கேள்விக்கு?

தென்னிந்திய மாநிலங்களில் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே தெலுங்கானா மற்றும் கர்நாடகா விசிக சார்பில் மீண்டும் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்களை பெற்றுள்ள கட்சி பானை சின்னத்தில் நின்று ஒரு எம் பி யும் பெற்றுள்ள கட்சி எனவே சிதம்பரம், விழுப்புரத்தில் பானை சின்னம் வழங்க முன்னுரிமை உள்ளது தேர்தல் அலுவலர்கள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு முன்னுரிமை வழங்க வாய்ப்புள்ளது”

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...