தமிழக சட்டசபை இன்று கூடுகிறது..!

 தமிழக சட்டசபை இன்று கூடுகிறது..!

2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 2024-25 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் ஆய்வு செய்து நிறைவேற்றுவதற்காக சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். இந்த ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட், வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்வார்.

பொது பட்ஜெட்டை தொடர்ந்து 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால் இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்தது.

ஆனால், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சூழலில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது உறுதியானது.

கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சட்டசபை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை பிப்ரவரி 12ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்றைய தினம்ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்” என்று அறிவித்தார். தமிழகஅரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்வார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டசபை புதுப்பொலிவுடன் தயாராகி உள்ளது. தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...