சாதிவாரி கணக்கெடுப்பு! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

 சாதிவாரி கணக்கெடுப்பு! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இதனை அவசியம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான கடிதம் வருமாறு;

இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டுமென்று வலியுறுத்தி, முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டுமென்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் , மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும் என்றும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டந்த 90 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதாரம், நிலப்பரப்பு உள்ளிட்டவைகள் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது என்றும் ஆனால் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் இன்னும் தொடர்ந்து பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த முயற்சி வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பிரிவினருக்கு எடுத்துச் செல்லும் என்பதிலும், வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை மீது உங்கள் தனிப்பட்ட தலையீடை எதிர்பார்க்கிறேன் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...