புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று…

கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் மூலம், பயங்கரவாதிகளையும், பயங்கரவாத குழுக்களையும் உற்பத்தி செய்யும் நாட்டிற்கு பதிலடி கொடுக்க, பழைய முறைகளை கையாள இனியும் தயாராக இல்லை என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா தெளிவாக எடுத்து கூறியது.
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு காரணமாக இருந்தது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அடில் அகமது தர் குறித்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட அந்த அமைப்பு, தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது.

பயங்கரவாதி அகமது தர், 2018 மார்ச்சில் வீட்டை விட்டு வெளியேறும் போதுதான் அவனது குடும்பத்தினர் கடைசியாக பார்த்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில் காஷ்மீர் போலீசாரிடம் வாங்கிய அடி காரணமாக பயங்கரவாத அமைப்பில் இணைந்தது தெரியவந்தது. மேலும் 2016 செப்., முதல் 2018 மார்ச் வரை 6 முறை போலீசாரிடம் பிடிபட்டு பின்னர், குற்றச்சாட்டுகளின்றி விடுதலையானதும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!