தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க. தீவிரம்

சென்னை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது. இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.வில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என தகவல் வெளியானது. இதனையொட்டி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது. ஆனால் திடீரென இந்த கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, அ.தி.மு.க. பெரிய இயக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த சூழலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே உயர்மட்ட அளவில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. காலை முதலே கட்சியின் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது என கூறப்படுகிறது.

த.வெ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அ.தி.மு.க.வுக்கு வெளியில் இருந்து தி.மு.க. ஆதரவு அளிக்க முடிவு என்றும் தகவல் தெரிவிக்கின்றது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனினும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதனால், அக்கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் சென்று விடுவர்.

அந்த வகையில், தி.மு.க.வுக்கு 68 இடங்கள் இருக்கும். எனினும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்போது, மொத்த எண்ணிக்கை 121 ஆக இருக்கும். பெரும்பான்மையாக ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும். அந்த வகையில், போதிய அளவிலான இடங்களை இந்த கூட்டணி கொண்டிருக்கும். இதனால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது. தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!