செங்கல்பட்டு,தாம்பரம்,மின்சார ரயில்கள் நாளை ரத்து..!

 செங்கல்பட்டு,தாம்பரம்,மின்சார ரயில்கள் நாளை ரத்து..!

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமையான நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம் வழித்தடத்தில் சென்னையில் இருந்து மின்சார ரயிலில் பயணிக்க சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மின்சார ரயில்கள் வழித்தடத்தில் தான் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரப்போகின்றன. இதன் காரணமாக காலை முதல் இரவு வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- “சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நிற்காது.

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (09420) நாளை (ஞாயிறு) முதல் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. செங்கல்பட்டில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (17651) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (17643) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12759) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் எழும்பூர் ரயில் நிலையத்தில் நிற்காது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக , சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 9.20 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 24 சிறப்பு மின்சார ரயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் அட்டவணை இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பாருங்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...