மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!

 மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் மலையாளத்திலும் அறிமுகமாகிறார்.

கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார். கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்தனர். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள்வரை தொடர்கிறது. அவர் நடிக்கும் படங்களில் அசால்ட்டாக தனது நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்துவிட்டு சென்றுவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா மலையாள திரையுலகிலும் நுழைந்திருக்கிறார். மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஹே படத்தை இயக்கிய விபின் தாஸ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஃபகத் பாசிலும் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பதை படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறார். தமிழில் எப்படி கலக்குகிறாரோ அதேபோல் மலையாளத்திலும் சூர்யா கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...