நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி

 நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி

நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி. இதுவரை 48,000 பாடல்கள்வரை பாடியிருக்கும் ஜானகி அம்மாவுக்கு பல தலைமுறை ரசிக படையாக இருந்துவருகிறது. அவர் தனது குரலில் காட்டும் பாவங்களை மற்ற பாடகர்கள் அவ்வளவு எளிதாக காட்டிவிட முடியாது என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 86ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள்வரை தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள்.

’60 ​​​​​​ஆண்டுகளாக இசைத் துறையில் ஜொலித்த இசை அரசி, எஸ்.ஜானகியின் பிறந்த தினம் இன்று’. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒலித்த இவரது குரலுக்கு மயங்காதோர் இல்லை.

‘வயசான காலத்துலேயும் ஏன் பாடிக்கிட்டு இருக்காங்க. குரலில் தடுமாற்றம் வந்துடுச்சு’னு ஒரு குரல் ஒலிக்கும் முன்பே, கெளரவத்துடன் இசைத் துறையில் இருந்து விலகிக்கிறேன்” என அதிரடியாக முடிவெடுத்தவர் எஸ்.ஜானகி. யாரும் எந்தச் சூழலிலும் தன்னை குறைசொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பவர். இந்திய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானவர்களின் இசையில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இவர், இசைத்துறைக்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.

ஆந்திர மாநிலம் பள்ளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். ஒவ்வோர் ஊரிலும் சில ஆண்டுக்காலம் என மாறி மாறி வசிக்கும் இளமைக் காலம். தந்தை ஆசிரியராக இருந்தாலும், ஜானகிக்குக் கல்வியில் பெரிய அளவில் நாட்டம் இல்லை. அப்பாவிடம் அடியும் திட்டும் வாங்கியபோதும் தனக்குப் பிடிக்காத கல்வியிடம் இருந்து விலகியே இருந்தார். இளம் வயது முதலே ஒரு முடிவு எடுத்தால், அதில் விடாப்பிடியாக இருப்பது ஜானிகியின் குணம். ‘இனி என்னதான் செய்றது? படிக்க மாட்டேன்னு சொல்றாள். இனி அவளோட தலையெழுத்தை அவளே முடிவு செய்யட்டும்’ என அவரது அப்பா சொல்லிவிட்டார்.

படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும், இசைஞானம் ஜானகியைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. மூன்று வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களையும் பாடி அசத்தினார். இவரது ஆர்வத்தைப் பார்த்து, எட்டாவது வயதில் பைடிசாமி என்கிற நாதஸ்வர வித்வானிடம் இசை கற்க அனுப்பினார் தந்தை. ஆர்வமுடன் இசை கற்றுவந்த ஜானகியிடம், ‘நீ சங்கீதம் கத்துகிட்டது போதும். நீயே சங்கீதம்தான். இனி உனக்குச் சங்கீதம் கத்துக்கொடுக்கத் தேவையில்லை’ என பத்தே மாதங்களில் குருநாதர் வாழ்த்தி அனுப்பினார்.

சென்னைக்கு குடிபெயர்ந்த நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோவில் பணிக்குச் சேர்ந்தவருக்கு, படிப்படியாகச் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1957-ம் ஆண்டு, ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து அவரது குரலில் ஏராளமான வெற்றிப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. குறிப்பாக, 1962-ம் ஆண்டு ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘சிங்கார வேலனே தேவா’ பாடலை இன்றளவும் பிற பாடகர்கள் பாட அச்சப்படுவர். அவ்வளவு கடினமான பாடலை இளம் வயதிலேயே பாடி அசத்தினார் ஜானகி. தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். கன்னடம், மலையாள மொழிகளை நன்றாகப் பேசுவார். இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடல்களை ஓய்வின்றி பாடினார்.

தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்த போதும், 70-களின் இறுதியில்தான் எஸ்.ஜானகிக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. பல வெரைட்டியான பாடல்களையும் பாடும் திறமை இருந்தும், அதற்கான முழுமையான வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது நேரம் உருவானது புதுக்கூட்டணி. 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம், ஜானகிக்குத் தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத புகழைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் செம ஹிட். இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து ஜானகியின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அதனால், எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி, தொண்ணூறுகள் வரை, இளையராஜா இசையமைப்பில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இளையராஜா இசையமைப்பில் எஸ்.ஜானகி – எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய டூயட் பாடல்கள் இன்றளவும் காதல் மனங்களை வருடும் கீதங்கள். தொடர்ந்து 90-களில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தற்போதைய அனிருத் வரையில் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

சோலோ, டூயட், தாலாட்டு, குத்து, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் பாடி, இன்றளவும் சாதனையில் முன்னிலையில் இருக்கும் தென்னிந்திய பின்னணிப் பாடகி இவரே. கஷ்டமான பாடலாக இருந்தாலும், கண்களை மூடாமல், கைகளை அசைக்காமல், முகபாவனைகளில் கஷ்டப்படாமல் மிக எளிதாகப் பாடுவது இவருக்கே உரிய சிறப்பு. குழந்தைக் குரலில், ஆண் குரலில் பாடி எல்லோரையும் ஆச்சர்யப்படவைப்பார். அதிகமான இந்தி மொழிப் பாடல்களைப் பாடிய ஒரே தென்னிந்திய பாடகியும் இவரே. நான்கு தேசிய விருதுகள், பல்வேறு மாநிலங்களின் முப்பதுக்கும் அதிகமான விருதுகளை வென்றவர் ஜானகி. புகழ் உச்சியில் இருந்தபோது மத்திய அரசின் பத்ம விருதுகள் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தென்னிந்திய கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தைரியமாகச் சொன்னார்.

1992-ம் ஆண்டு, தேவர் மகன் படத்தில் பாடிய ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப் பெற டெல்லி சென்றிருந்த சமயம். ஜானகியைப் பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம், ‘இதே ஆண்டில் ‘ரோஜா’ படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை பாடலை பாடகி மின்மினி மிகத் திறமையாகப் பாடியிருந்தார். எனக்குக் கிடைத்த தேசிய விருது அந்தப் பொண்ணுக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என கூறி நெகிழவைத்தவர். அந்த அளவுக்குத் திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக இருந்தவர் ஜானகி.

நடிகர் கமல்ஹாசன் பின்னணிப் பாடகராக இவருடன் இணைந்து பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட். நடிகர் ரஜினிகாந்த் பாடிய ஒரே பாடலான, ‘மன்னன்’ படத்தின் ‘அடிக்குது குளிரு’ பாடலில் இனைந்து பாடியவரும் ஜானகிதான்.

எந்த அலங்காரமும் செய்துகொள்ளாத, நகைகள் அணியும் பழக்கம் இல்லாத எளிமையான தோற்றம். எப்போதும் வெள்ளை நிறச் சேலையுடன், கழுத்துவரை நீண்ட ரவிக்கையுடன் இருப்பது ஜானகியின் அடையாளம். ‘ஒருவேளை எனக்குப் படிப்பில் ஆர்வம் வந்து படிக்கச் சென்றிருந்தால், வேறொரு துறைக்குப் போயிருப்பேன். என் குரல் வீட்டைத் தாண்டிருக்காது. இப்போ இத்தனை பேர் என் பாடல்களை ரசிச்சுக்கிட்டு இருக்க மாட்டாங்க. கடவுள் எனக்குக் கொடுத்த அன்புப் பரிசு இசைஞானம். நான் சின்ன வயசுல இருந்து ஒரு முடிவெடுத்தால், அது சரியாகத்தான் இருக்கும்’ என அடிக்கடிச் சொல்வார்.

”திறமை இருக்கிறது, வாய்ப்பு வருகிறது என நாம் மட்டும் பாடி புகழையும் பணத்தையும் சம்பாதிச்சுக்கிட்டு இருப்பது நியாயமில்லை. அதனால், வருங்கால சந்ததியினருக்கு வழிவிட வேண்டும். அதன்படி மற்றவர்கள் யாரும் என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறை சொல்லும்முன், என் வருங்கால தலைமுறையினரும் புகழ்பெற வேண்டும் என நான் அமைதியாக இசைத் துறையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன்” என அறிவித்தார். அதன்படியே ஓய்வுக் காலத்தை இசையுடனே கழித்து வருகிறார், எஸ்.ஜானகி.

எஸ்.ஜானகி, இன்னும் பல்லாண்டுகள் நீடித்த ஆயுளுடனும் புகழுடனும் வாழ வாழ்த்துவோம்!

– கு.ஆனந்தராஜ்

நன்றி: விகடன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...