கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 2 | பாலகணேஷ்

இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று.

ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..!

இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன்.

சிவகாமியின் சபதம் | கல்கி

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை ஆயத்தப்படுத்தும் பணியை இருவரும் செய்கின்றனர். ஆயனச் சிற்பியையும், சிவகாமியையும் காஞ்சிக்குள் வரும்படியும் இல்லாவிட்டால் சோழநாடு செல்லும்படியும் பரஞ்சோதி தெரிவிக்கிறார். இதற்கிடையில் மாமல்லரும் சிவகாமியும் எழுதிக் கொண்ட காதல் ஓலைகளை ஒற்றர் தலைவன் சத்ருக்னன், போர்முனையிலிருக்கும் மகேந்திரரிடம் சேர்ப்பிக்கிறான். கங்கநாட்டரசன் துர்விநீதன் காஞ்சியை நோக்கி படையுடன் வருவதாகவும், அவனை எதிர்கொண்டு முறியடிக்கும் படியும் சத்ருக்னனிடம் அவசர ஓலை கொடுத்து காஞ்சிக்கு அனுப்புகிறார் மகேந்திரர்.

ஆயனரையும், சிவகாமியையும் சந்திக்கும் நாகநந்தியடிகள் தன்னுடன் வரும்படி அழைத்துச் செல்கிறார். போருக்குமுன் அங்கு வரும் மாமல்லரும் பரஞ்சோதியும் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர். அசோகபுரம் என்னும் ஊரில் ஆயனரையும், சிவகாமியையும் தங்க வைக்கும் நாகநந்தியடிகள் மகேந்திரரின் சாமர்த்தியத்தால் புள்ளலூரில் நடந்த போரில் துர்விநீதன் தோல்வியுற்றதையும், பல்லவர் படைகள் அவனைத் துரத்திச் செல்வதையும் அறிகிறார். அதேசமயம் சிவகாமியும், ஆயனரும் அங்கே இருப்பதை துரத்திச் செல்லும் படையின் முன்னணியில் இருக்கும் மாமல்லர் பார்த்து விடுகிறார்.

அன்றிரவு திருப்பாற்கடல் என்ற பெரிய ஏரியின் கரையை நாகநந்தி உடைத்துவிட, பெருவெள்ளம் ஊரைச் சூழ்கிறது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயனரையும், சிவகாமியையும் மாமல்லர் வந்து காப்பாற்றுகிறார். வெள்ளம் வடியும் வரை அவர்கள் ஒரு கிராமத்தில் தங்க நேரிடுகிறது. அங்கே நாகநந்தி மறைந்திருந்து விஷக்கத்தி எறிந்து மாமல்லரைக் கொல்ல முயல்கிறார். பல்லவ ஒற்றனான குண்டோதரன் அவரது முயற்சியை முறியடிக்கிறான். மாமல்லரை பரஞ்சோதி சந்தித்து காஞ்சிக்கு உடன் வரும்படி சக்கரவர்த்தியின் ஆணை என்று கூறி அழைத்துப் போகிறான்.

பின் அங்கு வரும் மகேந்திரர், சிவகாமியிடம், மாமல்லனை மறந்து விடும்படி வேண்டுகிறார். பாண்டியனும் காஞ்சி மீது படையெடுத்து வருவதால் அவன் மகளை மாமல்லருக்குத் திருமணம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார். ஆயனரிடம் பல்லவ இலச்சினை தந்து செல்கிறார். அதைத் திருடிவிடும் நாகநந்தி, காஞ்சிக் கோட்டையினுள் புகுந்து குழப்பம் விளைவிக்க முயன்று மகேந்திரரால் சிறைப்படுகிறார். காஞ்சி நகரை வாதாபிப் படைகள் சூழ்ந்து கொள்ள, முற்றுகை ஆரம்பமாகிறது.

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

புலிகேசியின் படைகள் காஞ்சியின் அகழியையும், கோட்டைச் சுவரையும் உடைக்க முயன்று  தோல்வியடைகின்றன. முற்றுகைக்கு முன்பே மகேந்திரர் எல்லா அணைகளையும் உடைத்து விட்டதால் மூன்று மாத முற்றுகைக்குப் பின்னர் புலிகேசியின் படைகள் உணவும், தண்ணீருமின்றித் தவிக்க நேரிடுகிறது. வடநாட்டு சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து வரப்போகிறார் என்ற வதந்தியை மகேந்திரர், ஒற்றர் படை மூலம் புலிகேசியின் படையில் பரவவிட, புலிகேசி சமாதானத் தூது அனுப்புகிறார். மகேந்திரர் அதனை ஏற்றுக் கொண்டு புலிகேசியிடம் நட்பு பாராட்ட விரும்ப, மாமல் லருக்கு அதில் சம்மதமில்லை. அவரை, பரஞ்சோதியுடன் சென்று பாண்டியனைத் தோற்கடித்து புத்தி புகட்டும்படி அனுப்பி விடுகிறார் மகேந்திரர்.

காஞ்சி வரும் புலிகேசிக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. அவரது விருப்பத்தின் பேரில் சிவகாமியை வரவழைத்து அரசவையில் நடனமாடும்படி செய்கிறார் மகேந்திரர். புலிகேசி புறப்படும் தருவாயில் அவரைத் தாம் வென்ற விதத்தை விரிவாக மகேந்திரர் சொல்ல, ஒவ்வொரு கட்டத்திலும் தான் ஏமாற்றப்பட்டதை உணரும் புலிகேசியின் மனம் எரிமலையாகிறது. தன் படைப் பிரிவின் ஒரு பகுதியை நிறுத்தி பல்லவ நாட்டின் சுற்றுப்புற கிராமங்களை சூறையாடி எரித்து அழிக்கும்படி கூறிவிட்டு வாதாபி நோக்கிச் செல்கிறான். காஞ்சியிலிருந்து சிவகாமியும் ஆயனரும் சுரங்கப்பாதை மூலம் க‌ோட்டையை விட்டு வெளியேறி வாதாபிப் படைகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் சிறையிலிருந்த நாகநந்தி பிட்சு தப்பித்து விடுகிறார். புலிகேசியைப் போலவே இருக்கும் தன் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, புலிகேசி வேடம் தாங்கி மாமல்லபுரத்து கலைச் செல்வங்கள் அழியாமலும், ஆயனர் கொல்லப்படாமலும் காப்பாற்றுகிறார். சிவகாமி வாதாபிப் படைகளிடம் சிக்கி விட்டதை அறிந்த மகேந்திரர் படையுடன் வர, அவருடன் போரிடுகிறார் புலிகேசியாக இருக்கும் நாகநந்தி. போரில் விஷக்கத்தியால் மகேந்திரரைத் தாக்கி விட்டு சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு செல்கிறார். விஷக்கத்தி தாக்கிய மகேந்திரர் நோய்வாய்ப்படுகிறார்.

வாதாபி சென்றதும்தான் புலிகேசியும், நாகநந்தியும் இரட்டையர்கள் என்பதை சிவகாமி அறிகிறாள். அவள் மீது தான் கொண்ட காதலைச் சொல்கிறார் நாகநந்தி. வேங்கியில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் காரணமாக பிட்சுவை அங்கே அனுப்பும் புலிகேசி, சிவகாமியை தன் சபையில் நடனமாடும்படி கேட்கிறான். அவள் மறுக்கவே பல்லவ கைதிகளை சாட்டையால் அடித்தே கொல்வதாக அச்சுறுத்தி வாதாபியின் நாற்சந்திகளில் நடனமாடும்படி செய்கிறான். நாடு திரும்பும் பிட்சு, இதைக் கண்டு சினம் கொண்டு புலிகேசியிடம் வாதாடி சிவகாமியை காஞ்சிக்கே திரும்ப அனுப்ப அனுமதி பெற்று வருகிறார். அவளிடம் அதைச் சொல்ல, மாமல்ல நரசிம்மர் படையுடன் வந்து வாதாபியை எரிப்பதையும், வாதாபி மக்கள் மடிவதையும் கண்ணால் கண்ட பின்னரே தான் விடுதலை பெறுவேன் என்று சிவகாமி சபதம் செய்கிறாள்.

மாமல்லர், மகேந்திரரின் அனுமதியின்பேரில் பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியோருடன் மாறுவேடத்தில் வாதாபி வருகிறார். சிவகாமியைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல அவர்கள் முற்பட, அவள் வரமறுத்து தன் சபதத்தைக் கூறுகிறாள். அவர்கள் வாக்குவாதத்தில் இருக்கும் போது நாகநந்தி வந்துவிட, மாமல்லர் மட்டும் கோபத்துடன் தப்பிச் சென்று விடுகிறார். காஞ்சி வரும் மாமல்லரிடம் குலம் தழைக்க பாண்டியன் மகளை மணக்கும்படி வற்புறுத்தி சம்மதம் பெறுகிறார் நோயுற்றிருக்கும் மகேந்திரவர்ம பல்லவர்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 1 | அடுத்தபகுதி – 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!