நான் ஒரு பெண்!!!

 நான் ஒரு பெண்!!!

நான் ஒரு பெண்!!! அதனால் மட்டுமே அதற்காக மட்டுமே அஞ்சுகிறேன்!!!! 

நான் ஒரு பெண் 

மாதவம் செய்தல்ல – எப்பிறப்பில் செய்த 

மாபாவத்தின் பலனோ – இப்பிறப்பில் – இங்கே – நான் ஒரு பெண்!! 

பெண்ணாய் பிறந்த ஒரே ஒரு பெரும் குற்றத்திற்காக, 

எனக்கு மட்டுமாய் இந்த சமூகம் எழுப்பிவைத்திருக்கும் 

இரும்புச்சங்கிலிகளின் முரட்டுப் பிடியில்  

மூச்சு முட்டிப்போய் நிற்கிறேன்!! 

அன்றாடமும் அஞ்சி அஞ்சியே அழிந்துவிடுமோ – என 

வெஞ்சினம் கொண்டு இதை எழுதுகிறேன். 

ஆம்!! அன்றாடமும்  அச்சத்தோடுதான் வாழ்கிறேன் நான்!! 

அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டிருக்க, 

இந்த 21ம் நூற்றாண்டிலும் – பெண் என்பதால் மட்டுமே 

நான் அச்சத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!

பிறந்தது பெண் குழந்தை என்று அறியவரும் அந்த நொடி- 

‘பொம்பள புள்ளையா? 

இன்னைல இருந்து புருஷனும் பொண்டாட்டியும் சொத்து சேக்க ஆரம்பிச்சுருங்க’என  

அன்பான உறவாய் அன்றி – அழுத்தும் சுமையாய், 

நான் பார்க்க ஆரம்பிக்கப்படும் அந்த நொடிக்காய் அஞ்சுகிறேன்!! 

பால்வேறுபாடு கூட அறியாத – பச்சிளம் வயதிலேயே – 

‘பொம்பள புள்ள! இப்படியா இருப்பாங்க?? இப்படித்தான் இருக்கணும்!! என்று 

என் எதார்த்தத்தை முளையிலேயே கிள்ளி விட்டு, 

அதுவாக அல்ல, இதுவாகத் தான் வளர வேண்டுமென 

கட்டாயப்படுத்தபடுவதை எண்ணி அஞ்சுகிறேன்!! 

உளமுதிர்ச்சி அடையும்முன்னரே உடல்முதிர்ச்சி அடைந்து விட்டால் கூட – 

அதையே எனக்கான எல்லையாய் கருதி – 

‘பொம்பள புள்ள’ என்ற பதத்தை அப்படியே 

‘வயசு புள்ள’ என்ற பதமாய் மாற்றி —

என் உள உலகியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் – 

முட்டாள்தனத்திற்கு பயந்து அஞ்சுகிறேன்!! 

வயது வரும் முன்னரே- ‘எப்ப கல்யாணம்?’ 

ஓராண்டு முடியும் முன்னரே – ‘விசேஷம் ஒண்ணும் இல்லையா?’ -எனும் 

பழமையில் ஊறிய பண்பாடற்ற கேள்விகளால் – 

யாரோ விரட்ட எதையோ நோக்கி ஓடுவதான –

அந்த குழப்ப நிலைக்கு பயந்து அஞ்சுகிறேன்!! 

குடும்பம் குழந்தை என்றானபிறகு – அவர்கள் எல்லாம் – 

அவர்கள் தனித்தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்த பிறகும் கூட – 

நான் மட்டும் அவர்களுக்காய் ஓடிக்கொண்டிருக்கும் – 

இலக்கில்லா என் நிலைக்காய் அஞ்சுகிறேன்!! 

இவை எல்லாம் மீறி- குடும்பத்தடை எல்லாம் தாண்டி- வெளியில் வந்தால் – 

அய்யய்யோ!!! 

பெண்ணை தன்னை போன்ற மனித படைப்பாக அல்ல – மாறாக 

அவளை ஒரு சதைப்பிண்டமாக மட்டுமே கருதி – 

அங்கங்களை மேயும் காமாலைக்கண்கள் !! 

உரசிச்செல்லும் உறுத்தலற்ற உடல்கள் !! 

எங்கேனும் தொட்டுவிட முயலும் கட்டுப்பாடற்ற கைகள் !! 

பெண் அங்கங்களை கெட்ட வார்த்தையாய் – 

                                     பயன்படுத்தும் கேடுகெட்ட வாய்கள்!! என 

எங்கும் நிறைந்திருக்கும் – ஆபாச அசிங்கங்களுக்காய் அஞ்சுகிறேன்!!! 

இதோடு முடிவதில்லை என அச்சத்திற்கான ஆதாரங்கள்!! 

தனியே பயணிக்க – தயக்கமின்றி அந்நியரை எதிர்கொள்ள- 

உடையை தேர்வு செய்ய – உள்ளதை உள்ளபடி பேச – இன்னும் 

குனிய- நிமிர- உட்கார- எழும்ப- அவருக்கு- இவருக்கு- அதற்கு- இதற்கு- என 

நான் அஞ்சுவதற்கான காரணங்களுக்கு முடிவே இல்லை!!! 

ஒரு பெண் என்பதால் மட்டுமே- 

நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு தான் என்ன? 

சமூகத்தின் ஒட்டுமொத்த முடிவு சாத்தியமா?? சந்தேகம் தான்!! ஆனால் – 

உங்கள் வாழ்வில் தொடர்புடைய –

இந்த அச்சங்களை தினம்தினம் சந்தித்துக்  கொண்டிருக்கும்

அந்தப்  பெண்களுக்காய் – அவர்களின் அச்சங்களை குறைக்க- 

என்ன முடிவு எடுப்பீர்கள்??? 

கேள்வியுடன் உங்களில் ஒருத்தி!!!!!!

                – ஆரா அருணா

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...