அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை

 அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை

பத்திரிகையில் பணியாற்றியதால் மற்ற பத்திரிகைகளில் நான் எழுதவில்லை. பணி ஓய்வுக்குப் பின்பே அமுதசுரபி இதழுக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். மொத்தத்தில் நான் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டு சுமாராக இருந்திருக்கலாம். ஆனால், ஏன் இப்படிக் கதை எழுதி இருக்கிறோம் என்று எண்ணுமளவு மோசமான கதைகளை நான் ஒருபோதும் எழுதியதில்லை. அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை. அப்படி யோசித்ததே இல்லை.

எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பிளாட்பார்ம் கிடைக்கிறதே ஒரு அங்கீகாரம்தான். எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைக்கணும். எனக்கு அந்த பிளாட்பார்ம் ரெடிமேடாவே கிடைச்சது. அதனால அங்கீகாரத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாம நான் ஓடிட்டே இருந்தேன்.

ஆனால், என்னவென்றால் ஒரு பத்திரிகை உலகில் இருக்கும் போது, அந்தப் பத்திரிகைத் தர்மத்துக்கு உட்பட்டுதான் எதையும் செய்ய வேண்டி இருக்கும். அந்த வட்டத்துக்குள்ள செயல்பட வேண்டி இருக்கும். அது என் மனசுக்கு நல்லா பழகினதால் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி இயல்பான கதைகளும் எழுதி இருக்கேன். சவாலான கதைகளும் எழுதி இருக்கேன். நிறைய வாசிக்கும்போது நம் மனதில் நிறைய நல்ல விதைகள் விழும். அந்த விதைகளை ஒழுங்கா பராமரிச்சா நல்ல அறுவடை கிடைக்கும். அப்படி நிறைய வாசிச்சதன் பலன் எனக்கு ரொம்பவே கிட்டுச்சு. எழுத்து, சிந்தனை எல்லாம் ஒரு அமைப்புக்குள்ள கட்டுப்பட்டது. தன்னைத்தானே செதுக்கிக்கொள்ள உதவியது என்றும் சொல்லலாம்.

பெண்ணியக் கதைகள் அப்படின்னு தனிப்பட்ட முறையில் திணிச்சு எதையும் எழுதியதில்லை. மனித உணர்வுகளைப் பேசும் கதைகளை, மனதில் தோன்றுவதை உணர்வுபூர்வமாக எழுதினேன். கேள்விகள் கேட்கும் கதாநாயகிகளையும், போராட்டம் செய்யும் கதைநாயகிகளையும் படைத்திருக்கிறேன். ஆனால், அது எதுவுமே வலிந்து திணிக்கப்பட்டதில்லை.

நிறைய பேருடைய கதைகளை ரசிச்சுப் படிச்சிருக்கேன். ஆனால், ஒரு சிலருடைய கதைகள் மட்டும், படித்து முடித்து சில மணி நேரம் ஆன பின்பும் நம் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும். அவ்வளவு சீக்கிரம் அந்தச் சிந்தனையிலிருந்து நம்மால் வெளிவர முடியாது. ஆர். சூடாமணி, வையவன், அசோகமித்திரன், இந்திர பார்த்தசாரதி, பிரபஞ்சன் போன்றோரின் எழுத்துகள் அப்படியானவை. இப்போ ஏனோ சமீப காலமாகப் பத்திரிகைகள் வாசிப்பதில் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. படிக்க ஆரம்பிக்கும் போதே இந்தக் கட்டுரை இந்த ரீதியில்தான் செல்லும் என்று அனுபவரீதியான ஒரு புரிதல் இருப்பதால் ஒரு விலகல் வந்துவிட்டது.

தாத்தா கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தற்போது திரைப்படமாகி இருப்பது, மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு எழுத்து, பல லட்சம் வாசகர்களால் வாசிக்கப்பட்ட எழுத்து, பல காலங்களுக்குப் பிறகு திரைப்படமாகி இருப்பது என்பது அந்த எழுத்தின் வலிமைதானே! அதுமட்டுமல்லாமல் அந்தத் திரைப்படம் இப்படியொரு வெற்றி பெற்றது. மக்களிடமிருந்து இப்படிப்பட்ட ரெஸ்பான்ஸ் வந்தது எல்லாமே மிக்க மகிழ்ச்சிதான். நான் தாத்தாவைப் பார்த்ததில்லை. ஆனால், பாட்டி தாத்தாவைப் பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்காங்க. தாத்தா இப்படிப் படிப்பார், இப்படி எழுதுவார்னு தாத்தாவைப் பத்திதான் எப்பவும் பேசிக்கிட்டே இருப்பாங்க. அவர்கள் சொல்வதைக் கேட்டு கேட்டே அவர்மீது வியப்பும் மரியாதையும் அதிகமாகிவிட்டது.

முதலில் கல்கி அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மணியார்டர் அனுப்புவது, கணக்கு வழக்குகளைப் பார்ப்பது, கடிதங்களை வாசிப்பது, சீரமைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.

1981 இல் எனக்குத் திருமணம் ஆனது. கணவர் ரவி பிஸினஸ்மேன். கூட்டுக்குடும்பமாக இருந்தேன். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, ஒரு நிதானத்தைக் கற்றுக் கொடுத்தது. ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தது. இந்தப் பண்புகள் யாவும் என் பணியின்போது பெரிய உதவியாக இருந்தது.

இப்படிப் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு துணையாசிரியர் வேலைக்கு வராமல் போன ஒரு நாளில் கல்கி இதழின் அந்த வேலைகள் எனக்குக் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து அதனை இரண்டாண்டுகள் சீராகச் செய்ததன் பலனாக துணையாசிரியர் பதவி நிரந்தரமாகக் கிடைத்தது. அதுதான் வாழ்க்கையின் திருப்புமுனை.

துணையாசிரியராகப் பணியாற்றும்போது நிறைய கதைகள் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நூற்றுக்கணக்கான கதைகள் கல்கி அலுவலகத்துக்கு வரும். பரிசீலனைக்காக என்னிடம் வரும் கதைகளிலிருந்து நல்ல கதைகளை அலசி ஆராய்ந்து, வடிகட்டி இரண்டாம் சுற்றுக்கு ஆசிரியரிடம் அனுப்ப வேண்டும். கதைகளை ரீரைட் செய்ய வேண்டி இருக்கும். நல்ல கதைகளை முதன் முதலில் வாசிக்கிற நல்ல அனுபவமும் நிகழும். அப்படி நிதமும் கதைகள் வாசிக்க வாசிக்க எனக்கும் கதைகள் எழுத வேண்டும் என்கிற ஆசை வந்தது.

ஒருநாள் மகளிர் மட்டும் பேருந்தில் தவறுதலாக ஏறியதால் ஓர் இளைஞன் அவமானப்படுத்தப்பட்டான். அந்தச் சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. அந்த நிகழ்வை வேறு ஒரு பெயரில் கல்கி அலுவலகத்துக்கே கதையாக எழுதி அனுப்பினேன். நல்ல வேளையாக அது தேர்வுக்கு மற்றொரு துணையாசிரியடம் சென்றது. அந்தக் கதையைத் துணையாசிரியர் தேர்வு செய்து ஆசிரியருக்கு அனுப்பினார். பின் ஆசிரியரும் அந்தக் கதையைப் பிரசுரத்துக்குத் தேர்வு செய்தார். கதை வெளியானது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மணியார்டர் அனுப்ப வேண்டி அலுவலத்தில் விலாசம் கேட்டபோதுதான் அந்தக் கதை எழுதியது நான்தான் என உண்மையை எல்லாரிடமும் முதன் முதலாகச் சொன்னேன். முதல் கதை வெளிவந்தால் மகிழ்ச்சியடையாதவர்களே இருக்க முடியாது. ஆனால், எனக்கு மகிழ்ச்சியோடு நம்பிக்கையும் சேர்ந்து உண்டானது.

அதாவது ஒரு பிரபல பின்னணியில் இருந்து வரும்போது, அவங்க பெயருக்காக நம்ம கதைகளைத் தேர்ந்தெடுத்து, பேருக்குச் சும்மா நல்லா இருக்கு என்று சொல்லிடுவாங்களோ என்பதற்காகத்தான் வேறு பெயரில் எழுதினேன். அது யாருக்கும் தெரியாமலே என் கதை சிறப்பாக இருக்கிறது என அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என் தன்னம்பிக்கையை உயர்த்தியது. நிறைய எழுத வேண்டும் என்கிற உந்துதலை கொடுத்தது அந்தக் கதைதான். அப்பாவும் ‘நல்லாதானே எழுதுற, இனி தேவைப்படும் போது கல்கி இதழுக்குக் கதை எழுது’ என அனுமதி அளித்தார்.

அதன் பிறகு இதழுக்குக் கதைகள் தேவைப்படும்போது கதைகள் எழுத ஆரம்பித்தேன். சில நேரம் ஓவியத்துக்குத் தகுந்த கதைகள் எழுத வேண்டி இருக்கும். சில நேரம் சிறப்பிதழுக்கு ஏற்றாற்போல் கதைகள் எழுத வேண்டி இருக்கும். அதை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். இசைப்பின்னணி உண்டு என்பதாலும், இசையைப் பற்றி அறிந்திருந்ததாலும் கல்கி இதழில் ஆண்டுதோறும் வெளிவரும் இசைச் சிறப்பிதழுக்கு இசை சார்ந்த கதைகள் நிறைய எழுதி இருக்கிறேன். அத்தையிடம் கற்றுக்கொண்ட கலை சார்ந்த நுணுக்கங்கள் மிகவும் உதவியாக இருந்தன. இசை நுணுக்கங்களைக் கொண்டு எழுதும் அந்தக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தன. மொத்தத்தில் இதுவரை எத்தனை கதைகள் எழுதி இருப்பேன் என்றே தெரியாது. கணக்கே வைத்துக்கொள்ளவில்லை.

சீதா ரவி

நன்றி: ஸ்ரீதேவி மோகன், Her Stories

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...