சென்னை: வேட்பாளர் செலவு குறித்த கணக்கீட்டுக்காக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள உணவுகளின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிக்கன் பிரியாணிக்கு ரூ.110-ம், மட்டன் பிரியாணிக்கு ரூ.180-ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களின் செலவுக் கணக்கை கண்காணிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, காபி – ரூ.18, டீ – ரூ.12, இட்லி (2) – ரூ.40, சப்பாத்தி அல்லது பூரி (2) – ரூ.60, பொங்கல் – ரூ.50, வடை – ரூ.15, சைவ சாப்பாடு – ரூ.110, அசைவ சாப்பாடு – ரூ.350, வெஜ் பிரியாணி – ரூ.50, கலவை சாதம் – ரூ.45, சிக்கன் பிரியாணி – 110, மட்டன் பிரியாணி – ரூ.180, குடிநீர் பாட்டில் – ரூ.15 என நிர்ணயித்துள்ளது.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள மேற்கண்ட விலைப் பட்டியல் அடிப்படையில்தான் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் கணக்கிடப்படும். மேலும், பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும், பட்டாசு வெடிப்புக்கும் செலவு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட ஆட்டங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித் துள்ளனர்.
சென்னை மாவட்டத்துக்கு பட்டியல் சென்னை மாவட்ட வேட்பாளர்களுக்கு தனி செலவினப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பிரச்சாரத்தின்போது, வேட்பாளருக்கு அணிவிக்கப்படும் சால்வைக்கு ரூ.150-ம், பெரிய அளவிலான மலர் மாலைக்கு ரூ.400-ம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டால் ஒரு ஆப்பிள் ரூ.35 என கணக்கிடப்படும்.
உணவு விலைகளை பொருத்தமட்டில் கலவை சாதம் (ஒரு பாக்ஸ்) ரூ.50, இனிப்பு (100 கிராம்) ரூ.90, சிறிய பாட்டில் குடிநீர் ரூ.7 என கணக்கீடு செய்யப்படும். ஆயிரம் வாலா பட்டாசு வெடி வெடித்தால் ரூ.650, வாழை மர தோரணத்துக்கு ஒரு வாழைக்கு ரூ.750 என வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். பிளாஸ்டிக் இருக்கைக்கு ரூ.11, சொகுசு இருக்கைக்கு ரூ.165-ம் வாடகைக் கட்டணமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல் அடிப்படையிலேயே தங்களின் தேர்தல் செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
