“அரசை விமர்சிப்பது நாம் அப்புறம் செய்யலாம்” – கமல்ஹாசன்..! | நா.சதீஸ்குமார்

 “அரசை விமர்சிப்பது நாம் அப்புறம் செய்யலாம்” – கமல்ஹாசன்..! | நா.சதீஸ்குமார்

ஒரு கோடி மக்களை உடனே சென்றடைவது என்பது சாத்தியம் இல்லை என்றும் மாறி மாறி குறை சொல்வதை விட்டுவிட்டு, கடமையை செய்ய வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலின் தாக்கத்தில் சென்னையில் பெய்த பெருமழையால் மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. டிச4, 5 ஆம் தேதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். மழை விட்ட பிறகு முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடிந்தாலும் புறநகர் பகுதிகளில் இன்னும் மழை நீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

அங்கும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியதாவது:- எதிர்பார்த்த அளவை விட அதிகமான பாதிப்பு சென்னையில் இருக்கிறது.

இப்போது நாம் குறை சொல்லிக் கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்வது நம் கடமையாகும். அப்படித்தான் நாங்கள் இருந்து இருக்கிறோம். எப்போதுமே அப்படித்தான் இருந்து இருக்கிறோம். கோவிட் காலத்தில் கூட இந்த வீட்டை கோவிட் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவதற்காக கொடுக்க தயாராக இருந்தேன். அதற்கு உடனே கிடைத்த எனக்கு பதில் என்னவென்றால், இந்த வீடு கோவிட் நோய் தொற்றுள்ள வீடு என்று நோட்டீஸ் ஒட்டிவிட்டு போய்விட்டார்கள்.

இந்த மாதிரி இடைஞ்சல்கள் எனக்கு புதிது கிடையாது. நாங்கள் ரொம்ப நாளாக அனுபவித்து வருகிறோம். 40 வருடங்களுக்கு முன்னாள் பெயர் தெரியாத சின்ன கூட்டமாக இருந்த போது கூட எங்களுக்கு தொந்தரவு வந்தது. ஆனால், இப்போது மக்களுக்கு உதவுவது என்பதை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசை விமர்சிப்பது நாம் அப்புறம் செய்யலாம்..

நாம் செய்ய வேண்டியது ஒரு விஷயம்தான். அதை செய்யலாம். வல்லுனர்களுடன் அமர்ந்து இந்த மாதிரி பேரிடர்கள் வரும் போது அப்போதைக்கு தற்காத்துக்கொள்வது எப்படி என்று பிறகு நீண்ட கால திட்டங்கள் என்ன தீர்வு என்ன என்று ஆராய வேண்டும். தற்போதைய நிகழ்வு பருவ நிலை மாற்றம் என்று உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்வு.

இங்கே மட்டும் எதோ திடீரென வந்து விட்டது என்று இல்லை. வடநாட்டிலும் இருக்கு இங்கேயும் இருக்கு… 20 செ.மீட்டர் வந்தால் கூட நாங்கள் தாங்கி கொள்வோம். அதற்கான ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளோம் என பெருமையாக பேசி வந்தார்கள். ஆனால் வந்தது என்னமோ 24 மணி நேர்த்திற்கு 56 செ.மீட்டர் பெய்துள்ளது.

இதற்கு மாறி மாறி குறை சொல்வதை நிறுத்த வேண்டும். குறை சொல்லும் படலத்தை பிற்பாடு வைத்துக்கொள்ளலாம். உடனே செய்ய வேண்டிய விஷயம் என்ன… அரசு இயந்திரம் 1 கோடி மக்களை உடனே சென்றடைவது என்பது சாத்தியம் இல்லை. எனவே நாமும் நமக்கு தேவையான முன்னேற்பாடுடன் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...