சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஒத்திவைப்பு..! | நா.சதீஸ்குமார்

 சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஒத்திவைப்பு..! | நா.சதீஸ்குமார்

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் நடைபெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு’ சேலத்தில் நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி (17-12-2023, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இப்படி ஒரு பெருமைமிகு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை, இந்திய அரசியலில் திருப்புமுனை மாநாடாகவும், தமிழ்நாட்டு வரலாற்றில் தடம் பதிக்கக்கூடிய மாநாடாகவும் மாற்ற இன்றிலிருந்தே உழைக்க உறுதியேற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரம்மாண்டமாக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 13 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அப்போதே டிசம்பர் மாதம் 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அத்துடன் 2வது மாநில மாநாட்டிற்காக இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஒன்றிணைந்து ரூ. 51 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அப்போதே வழங்கினர். இந்நிலையில், தற்போது மாநாடு நடைபெறும் தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...