தூரிகையின் பெருமை | ஆதியோகி
![தூரிகையின் பெருமை | ஆதியோகி](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2022/05/Painting.jpg?resize=850%2C560&ssl=1)
தூரிகையோ, உளியோ, பேனாவோ
பெரிதாய்ப் பெருமை கொள்ள
என்ன இருக்கிறது…?
பெருமைமிக்க ஒரு
ஓவியனின், சிற்பியின், கவிஞனின்
கைகளில் கருவியாய்
இருந்ததைத் தவிர…
++++++++++++++++++++++
மகிழ்ச்சி
———–
நாளை வாடப் போவது
தெரிந்தும்தானா,
சிரிக்கின்றன பூக்கள்…?
++++++++++++++++++++++
வார்த்தைகள்
———–
‘பூக்கள் கூறும்
கவிதைகளை எல்லாம்
வடித்திடும் அளவுக்கு
தன்னிடம் வார்த்தைகளில்லை’
என்று புலம்புகிறது மொழி
++++++++++++++++++++++
எதிர்பார்ப்பு
———–
“நமக்கென்று எதிர்பார்ப்புகளே
இருக்கக் கூடாது”
என்றேதான்
எதிர்பார்க்கிறார்கள் எல்லோரும்.
++++++++++++++++++++++
காரணம்
———–
எரியும் தீ ஒருவேளை
அறிந்திருக்கக் கூடும்
‘தான் உறைந்து கிடந்தது
உரசிக் கொண்ட
குச்சியின் தலையிலா?
பெட்டியின் சுவரிலா?’
++++++++++++++++++++++
– ஆதியோகி