மாம்பழ மோர்க்குழம்பு!
பழமாக, ஜூஸாக, ஐஸ்க்ரீமாக… இன்னும் எப்படிச் சாப்பிட்டாலும் அலுக்காதது மாம்பழம். போனா வராது, பொழுதுபோனால் கிடைக்காது என்கிற மாதிரி இந்த சீசனை தவறவிட்டால் இன்னும் ஒரு வருடத்துக்கு மாம்பழம் சாப்பிடும் வாய்ப்பு குறைவு.
விதவிதமான வெரைட்டிகளில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டவர்கள், சற்று வித்தியாசமாக இந்த மாம்பழ மோர்க்குழம்பு செய்து ருசித்து இந்த நாளை சிறப்பாக்கலாம்.
என்ன தேவை?
நறுக்கிய மாம்பழம் – ஒரு கப் தயிர் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு மஞ்சள்தூள் – சிறிது அரைக்க தேங்காய் – அரை கப் காய்ந்த மிளகாய் – 4 சீரகம் – கால் டீஸ்பூன் பச்சரிசி – 2 டீஸ்பூன் தாளிக்க எண்ணெய் – ஒரு டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது காய்ந்த மிளகாய் – 2
எப்படிச் செய்வது? மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்து கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், பச்சரிசி முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் விழுது, கடைந்த தயிர் முதலியவற்றை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மாம்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து மோர்க்குழம்பில் ஊற்றி இறக்கவும்.
குறிப்பு: தயிர் சேர்த்தவுடன் அதிகம் கொதிக்கவிடக் கூடாது. தயிர் திரிந்துவிடும்.
