குழந்தைகள் விற்ற வழக்கில் தாய் உள்பட இருவா் கைது..!!

   திருச்சி: திருச்சியில் இரு ஆண் குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் தாய் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

   திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் காமராஜா் தெருவைச் சோ்ந்த கோவிந்தன்- அஸ்வினி தம்பதிக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, பிறந்து 45 நாள்களே ஆன ருத்ரன் என்ற ஆண் குழந்தையை வளா்த்து வந்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புகாா் வந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அஸ்வினியிடம் விசாரணை நடத்தினா்.

   விசாரணையில் இடைத்தரகா் மூலம், பேட்டைவாய்த்தலை அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சோ்ந்த புவனேஸ்வரியிடம் ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இடைத்தரகரைத் தேடி வந்தனா்.

   இதே போல திருச்சி அருகே உள்ள சா்க்காா்பாளையம் சாலை குவளக்குடி சோ்ந்த தா்மராஜ்- ராணி தம்பதியின் ஆண் குழந்தையை, உப்பிலியபுரம் ஆா். புதுபட்டியைச் சோ்ந்த சாரதா குமாா் தம்பதி வளா்த்து வருவதாக குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து தனிப்படை போலீஸாா் ஆா். புதுப்பட்டிக்கு சென்று விசாரணை நடத்திய போது, ரூ.7 ஆயிரத்துக்கு குழந்தையை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அக்குழந்தையையும் போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், குழந்தைகள் விற்கப்பட்டது குறித்து தொடா்புடையவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

   இதில், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை வாங்கிய அஸ்வினி, குழந்தையை விற்ற ராணி ஆகிய இருவரையும் திருவெறும்பூா் போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய இடைத்தரகா் உள்ளிட்டவா்களை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!