மாரடைப்பு வந்த 3 மணி நேரத்தில் உயிரை காக்கும் ‘லோடிங் டோஸ்’..!

 மாரடைப்பு வந்த 3 மணி நேரத்தில் உயிரை காக்கும் ‘லோடிங் டோஸ்’..!

மாரடைப்பு வந்துவிட்டால் 3 வகை மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் 3 மணி நேரத்தில் உயிரை காப்பாற்ற முடியும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் மருத்துவமனையில் ரூ 30 கோடி மதிப்பில் அதி நவீன சிகிச்சை பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது: 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையின் டாக்டர் பக்தவச்சலத்தை விமான நிலையத்தில் நான் சந்தித்தேன். அவருடைய பாக்கெட்டில் லோடிங் டோஸ் என சொல்லக் கூடிய 3 வகையான 14 மாத்திரைகளை வைத்திருந்தார். இது எல்லோரும் வைத்திருக்க வேண்டிய ஒன்று.

யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக இந்த 3 வகையான மாத்திரைகளை போட்டுக் கொண்டால் கோல்டன் ஹவரில் அந்த நோயாளியின் உயிர் காப்பாற்றப்படும். அதன் பிறகு அவருக்கு தேவையான இதய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் தெரிவித்திருந்தார்.

இது என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது. கடந்த 2023 ஜூன் 27 ஆம் தேதி கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் ஒரு திட்டத்தை தமிழக அரசின் சார்பில் தொடங்கி வைத்தோம். அந்த திட்டத்திற்கு பெயர் இதயம் காப்போம். உண்மையில் அந்த திட்டத்திற்கு பக்தவத்சலம் மருத்துவ திட்டம் என பெயர் வைத்திருக்கலாம்.

தமிழகத்தில் இருக்கும் 8713 துணை சுகாதார நிலையங்கள், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 10991 மருத்துவமனைகளிலும் இந்த லோடிங் டோசஸை வாங்கி வைக்க போகிறோம். மலை பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்து கொடுக்கப்படவுள்ளது.

அங்கு சுற்றியுள்ள மக்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் இந்த லோடிங் டோஸ்களை போட்டுக் கொண்டு அவர்களின் உயிரை காப்பாற்றி பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க உதவும். நாங்கள் இந்த திட்டத்தை தொடங்கிய போது டாக்டர் பக்தவத்சலம் அமெரிக்காவில் இருந்தார். அவர் கோவையில் இருந்திருந்தால் நாங்கள் அவரையும் அழைத்து வந்து தொடங்கியிருப்போம்.

இந்த திட்டம் தொடங்கி தற்போது ஒரு ஆண்டு ஆக போகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்த திட்டத்தையும் கொண்டு வரக் கூடாது, என்னை எந்த அரசு அலுவலர்களும் சந்திக்க கூடாது. அரசு வாகனத்தையும் பயன்படுத்தக் கூடாது. இந்த நிலையில் நம் அதிகாரிகளிடம் அன்அஃபிசியலாக ஒரு தகவலை கேட்டேன்.

அதில் தமிழகம் முழுக்க இருக்கும் துணை சுகாதார நிலையங்களில் எவ்வளவு பேர் லோடிங் டோஸ்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 7412 பேரும் துணை சுகாதார நிலையங்களில் 484 பேரும் லோடிங் டோஸ்களை பயன்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக லோடிங் டோஸ்களை 7896 பேர் பயன்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் பக்தவத்சலம் சொல்லும் லோடிங் டோஸ்கள் Atorvastatin 80 mg, Clopitab 150 mg, Disprin 350 mg ஆகிய மாத்திரைகளை உங்கள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள். இந்த மாத்திரையின் விலை ரூ 100 தான். மாரடைப்பு வந்த 5, 10 நிமிடங்களில் இந்த மருந்தை கொடுத்துவிட வேண்டும் என்றும் டாக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...