நான்கு மாவட்டங்களுக்கு அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு..! | நா.சதீஸ்குமார்

 நான்கு மாவட்டங்களுக்கு அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு..! | நா.சதீஸ்குமார்

மிக்ஜாம் புயலால் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையை முழுவதுமாக மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது. சென்னையின் முக்கிய சாலைகளிலும் இன்னும் கூட  மழைநீர் முற்றிலும் வடியாத நிலையில்,  திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில்,  நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.  மழை சற்றே ஓய்ந்துள்ள போதும்,  அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல பகுதிகளிலும் இன்னும் மின்விநியோகம் சீராக்கப்படாத நிலையில்,  சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

“அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியதின் அடிப்படையில் நான்கு மாவட்டத்திற்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...