ஆசிபா போன்று பாலியல் சிக்கிய குழந்தைகளை நினைந்து எழுதியது

 ஆசிபா போன்று பாலியல் சிக்கிய குழந்தைகளை நினைந்து எழுதியது

ஆசிபா போன்று பாலியல் சிக்கிய குழந்தைகளை நினைந்து  எழுதியது

எப்படி வலித்திருக்குமோ உனக்கு

என்னவெல்லாம் 

செய்திருப்பார்களோ உன்னை 

பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய்

கொடூரர்களின் தொடுதலை 

நீ உணர்ந்திருக்கமாட்டாய் 

அவர்களை நீ அண்ணனென்றோ

அங்கிளென்றோ மட்டும் தான் 

அழைத்திருக்க முடியும் 

தின்பண்டங்களோ சாக்லெட்டோ 

வாங்கித் தருவதாகக் கூறித் தான் 

அழைத்துப் போயிருப்பார்கள் 

உன் உடைகளை கழற்றும் போது கூட

உன்னால் யூகித்திருக்க முடியாது 

குளித்து விட்டுப் போகலாமெனக் கூறியிருப்பார்கள் நீயும் 

நம்பித் தொலைத்திருப்பாய் 

உன் உறுப்புகளை தொடும் போது கூட 

உன்னால் தடுத்திருக்க முடியாது 

அதை தொடுதல் தவறென்றும் 

நீ அறிந்திருக்க மாட்டாய் 

ஆண் உறுப்பு அப்படி இருக்குமென்று

நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை மகளே

அதற்கு தாயும் தெரியாது 

தங்கையும் தெரியாது 

தன்னால் ஆனவரை 

பெண் உறுப்புகளை சிதைத்துக் கொண்டிருப்பது தான் அதன் வேலை 

குழந்தையோ மகளோ 

என்றெல்லாம் நினைத்ததில்லை

முடிந்தவரை தன் இச்சைகளை 

நம் மீது எச்சிலாய் உமிழ்ந்து 

விட்டுத்தான் போவார்கள் 

சில சமயம் திரும்பியும் வருவார்கள் 

உன் கைகள் கட்டப்பட்டும் 

கழுத்து நெறிக்கப்பட்டும்

கொடூர நகங்களால் கீறியும்

உன்னை நாசப்படுத்தியிருக்கலாம் 

வலிக்கும் போது துடித்திருப்பாய்

காப்பாற்றி விடமாட்டார்களா 

என்று கதறியிருப்பாய் 

கடவுளின் காலடியில் கிடந்திருப்பாய்

காப்பாற்று என்றுகூட அழைத்திருப்பாய் 

அவரும் உடந்தையென்று 

உணர்ந்திருக்க மாட்டாய் 

கால்களை முறித்திருப்பார்கள் 

உறுப்புகளை சிதைத்திருப்பார்கள்

மூச்சு விடமுடியாமல் முணங்கி 

மயங்கிக் கிடந்திருப்பாய் 

அப்பாவை அழைத்திருப்பாய் 

அம்மாவை நினைத்திருப்பாய் 

தன்னிடத்திடத்திலும் 

ஓட்டை இருந்திருப்பதைக் கூட

அன்று தான் உணர்ந்திருப்பாய் 

நகர முடியாமல் செயலற்றுக் கிடந்திருப்பாய்

இரத்தம் வழிந்து கொண்டேயிருந்திருக்கும் 

எப்படியும் எழுந்ததும் வீட்டிற்கு 

ஓடிவிடலாமென நினைத்திருப்பாய் 

அடுத்தடுத்த மிருகங்களும் உன்னை

இரையாக்குமென்று நினைத்திருக்கமாட்டாய் 

இதற்கு மேல் என்னால் முடியாதென்று 

கெஞ்சியும் துடித்திருப்பாய் 

ஆண் வர்கங்களையே 

அறவே வெறுத்திருப்பாய் 

அவர்கள் குறி கொண்ட மிருகங்களென்று 

முற்றிலும் உணர்ந்திருப்பாய் 

அப்போது கூட அப்பாவையும் 

அண்ணனையும் அழைத்திருப்பாய் 

எல்லாம் முடிந்திருக்கும் 

எல்லாமும் சிதைந்திருக்கும்

கடவுள் காணொளி 

செய்திருப்பார் கயவர்களை

காப்பாற்றிக் கொண்டிருப்பார் 

இறுதியாகக் கூட 

நம்பித் தொலைத்திருப்பாய் 

அப்பா வந்ததும் அழைத்துப்போவாரென்று 

மரணம் சம்பவித்தாயிற்று 

குப்பையாய் நினைத்து 

தூக்கியெறிந்து விட்டுப் போயிருப்பார்கள் 

அடுத்தது யாரென்று அவர்கள் 

தேடிக் கொண்டிருப்பார்கள்  

போய் தொலைவோம் மகளே 

நம்மை சதையாகவும் யோனியாகவுமே 

பார்த்துத் தொலையும் ஆண்களுக்கு முன்னால் சதைப் பிண்டமாய் 

வாழ்வதை விட மரணம் கொடிதல்ல 

எங்களுக்கும் சேர்த்து 

இடம் பிடித்து வை ஆசிபா 

விரைவிலேயே நாங்களும் 

வந்து சேர்வோம் 

காப்பாற்ற துப்பில்லாத 

ஆண்களோடு பெண்களாய் 

வாழ்ந்து கொண்டிருப்பதை விட 

சாவதே மேல் சாகடிக்கப்படுவதே மேல்……….

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...