திருச்சியில் எந்த ரூட்டில் வருகிறது மெட்ரோ…

 திருச்சியில் எந்த ரூட்டில் வருகிறது மெட்ரோ…

திருச்சி; திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின் ரூட் மற்றும் அமைய உள்ள நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் இன்று (31.08.2023) சமர்பித்தார்.

தற்போது சென்னையில் மெட்ரோ இரயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கிவருகிறது. அதே போல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாத்தியக் கூறு ஆய்வின் மூலம் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் இந்த சாத்தியக் கூறு அறிக்கையில் கண்டறியப்பட்டன. அதன்படி போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் வழித்தடங்களில் 2 45 கி.மீ நீளத்திற்கு 45 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 3-ல் 15 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் இரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித கால போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மாற்றம் வரலாம். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...