நடிகர் பி.ஆர்.துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-5

 நடிகர் பி.ஆர்.துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-5

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

K.சிவசுப்பிரமணியம் எனும் இவர் 13-11-1931-ல் குப்புசாமி – மதுரம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சித்தார்த்தன் எனும் புனைபெயரிலேயே கடந்த 60 ஆண்டுகளாக நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு படைப்புகளையும் எழுதி வெளியிட்டு வெற்றி கண்டவர்.

எழுத்து உலகிலும், இலக்கியத்திலும் இவருக்கு உள்ள ஈடுபாடுதான் அதற்குக் காரணம். தொலைத்தொடர்புத் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். புகழ்பெற்ற ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் எனும் புனிதமான சொல்லுக்கு இவரது துணைவியார் ருக்மணியே ஒரு உதாரணம். இவர் எழுதும் ஒவ்வொரு நூலுக்கும் அவரே உறுதுணையாக இருந்து உதவுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது முகஸ்துதி அல்ல முற்றிலும் உண்மை.

இனியதொரு  இல்லத்தரசியாக விளங்கும் இவரும் BSNLல் பணிபுரிந்த சாதனைப் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது. சித்தார்த்தன் சாஸ்திரிய சங்கீதத்திலும் தேர்ச்சிப் பெற்ற ஒரு பாடகர். இவர் எழுதிய முதல் நாவல் ‘யாதும் ஊரே’. இது சங்க காலத் தமிழகத்தின் பண்பாட்டு சூழலில் அமைந்த வரலாற்று புதினம்.

‘வைஷாலி’, சுதந்திரத்திற்குப் பின் அரை நூற்றாண்டு காலத் தொழிற்சங்க அரசியல் பின்னணியில் அமைந்த நல்லதொரு நாவல். மற்றும் செவ்வானம், ஜீவன் முக்தன், விண்ணின் விளிம்பிலே நாததரங்கினி போன்ற படைப்புகளையும் எழுதிக் குவித்துள்ளார்.

இவரது எழுத்திற்குக் கிடைத்த பெருமைதான் ‘நாததரங்கினி’ நாவலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கிய முதல் பரிசு.

சமீபத்தில் ‘யாதும் ஊரே’ என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இவருக்கு மீண்டும் முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அது அவருக்கு  பெருமைதான்.  ‘சாம்ராட்  அசோகன்’ எனும் சரித்திர நாவலைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ள அருமை சகோதரர் சித்தார்த்தன் பாராட்டத்த தகுந்தவர்.

பன்முக வித்தகர் கே.தேவநாராயணன்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லிடைக்குறிச்சியில் குளத்து ஐயர் சிவகாமி தம்பதிக்கு 14.01-1925ல் மகனாகப் பிறந்த இவர் கலை உலகில் கால் பதித்த நாள் முதல் இயல், இசை, நாடகம் என பல துறைகளில் பயணித்து தன் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியவர்.

‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிதே கண்டேன்’ எனும் இவர் பாடிய ஒரு அருமையான பாடலை ‘கொலம்பியா’ எனும் நிறுவனம் பதிவு செய்து அதை ஆவணப்படுத்தியது.

அது விற்பனையிலும் முன்னிலை வகித்து வெற்றி படைத்தது. இதைப் பாடியவருக்கும், ரெக்கார்டை தயாரித்தவர்களுக்கும் பெருமைதானே. இதே பாடலை வேறு ஒரு பாடகரும் பாடியுள்ளார். அது திரைப்படத்திற்காக என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராகவோ, பின்னணிப் பாடகர் ஆகவோ வலம் வர இருந்த இவரை விதி வேறு ஒரு திசையில் அழைத்துச் சென்று மாற்று மொழிப் படங்களுக்குத் தமிழில் உரையாடல் எழுதும் ஒரு டப்பிங் ரைட்டராக இவரது பரிணாமம் மாறியது.

சுமார் 500 படங்களுக்கு மேலாக உரையாடல் எழுதிய உன்னதமான ஒரு டப்பிங் ரைட்டர் எனும் அந்தஸ்திற்கு  உயர்த்தப்பட்டார். மகாகவி பாரதியார் மேல் அளவில்லா பக்தி கொண்டிருந்த இவர், மேடையில் பேசும்போது ‘பாரதியே ஒரு பாரதம், அவன் பாட்டெல்லாம் தமிழ் மாருதம்’ என்னும் இரு வரிகளைச் சொல்லிய பிறகு தான் பேச்சைத் தொட்ங்குவார்.

ஹிந்தி மொழியில் வெளிவந்த ‘ராமராஜியம்’ எனும் திரைப்படத்தினை அண்ணல் மகாத்மா காந்தி பார்த்த ஒரே திரைப்படம் என்று ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த ‘ராமராஜ்ஜியம்’ திரைப்படம் தமிழில் உருவானபோது இவர்தான் உரையாடல் எழுதியுள்ளார். மற்றும் இவரது கைவண்ணத்தில் மயூரி, சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, குருதிப்புனல், இந்திரன் சந்திரன், அன்னமாச்சாரியா போன்ற படங்களுக்கும்  ராமானந்த சாகர் எழுதி இயக்கி D.D. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ டி.வி. தொடருக்கும்  தமிழில் இவரே உரையாடலை எழுதியுள்ளார் என்பது ஒரு தலைப்புச் செய்தி.

சாய்பாபா, கிருஷ்ணா போன்ற தொடர்களுக்கும் தமிழில் உரையாடல் எழுதிய இம்மாமனிதர் எப்போதும் தூய கதர் ஆடையிலேயே தோன்றுவார். போற்றிப் பாதுகாக்க வேண்டியவர் திரை உலகில் தெளிந்த நீரோடை ஆகிய அண்ணன் K.தேவநாராயணனைத்தான்..

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...