“6-ம் தேதி முதல் தவெக சார்பில் விருப்ப மனு”

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தவெக சார்பில் 6-ம் தேதி முதல் விருப்பமனு வழங்கப்படுகிறது.

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை விநியோகித்து நேர்காணல் நடத்தி வருகின்றன. அந்தவகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் விருப்ப மனு விநியோகத்தை 6-ம் தேதி முதல் தொடங்குகிறது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம்.

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், பிப்.6-ம் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் 14-ம் தேதி (சனிக்கிழமை) வரை கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

பிப்.6-ம் தேதி மதியம் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாட்களில் காலை 10 மணி முதல், மாலை6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!