சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்துள்ளார்.
தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் 2 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருந்தன. அதில், அண்ணாமலைக்கு கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை நேற்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும், எனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால். அவரை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதுதான் என் முதல் கடமை. எனவே, சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து நான் விலகுகிறேன். இது குறித்து கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தெரிவித்திருக்கிறேன். அதை ஏற்றுக் கொண்டு, எனக்கு பதில் வேறு பொறுப்பாளர்களை அவர் நியமிப்பார்.
அதே நேரத்தில் பாஜக பிரச்சாரத்திற்கு தயாராக உள்ளேன். கட்சி சொல்லும் வேலையை நான் செய்வேன். யார் முதல்வராக வேண்டும், யாருக்காக வேலை பார்க்க வேண்டும் என பாஜக தெளிவாக உள்ளது. நானும் ஒரு தொண்டர் தான். கட்சி சொல்வதை கேட்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என அனைவரையும் அரவணைத்துச் சென்ற அண்ணாவின் ஆட்சிக்கும், திமுகவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அண்ணா வழியை பின்பற்றுகிறோம் என திமுக கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக மீது இருக்கும் மீது வெறுப்பு, திராவிட சித்தாந்தத்தின் மீது இருக்கும் வெறுப்பாக மாறியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வென்றாலும், 56 சதவீதமாக இருந்த அவர்களது வாக்கு 41 சதவீதமாக குறைந்துள்ளது. உடைந்த கண்ணாடியை பசை வைத்து ஒட்டியது போல திமுக கூட்டணி உள்ளது. ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு இவிஎம் இயந்திரத்தில் பதில் உள்ளது. எங்களிடம் டபிள் இன்ஜின் உள்ளது. ஆனால், விஜயிடம் இன்ஜின் இல்லை, வண்டி இல்லை, ஆயில் இல்லை, பெட்ரோல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இவர்களெல்லாம் பாஜகவை பார்த்து டப்பா இன்ஜின் என்கின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அதற்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்து நீதித்துறையினர் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

