விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் இன்று (பிப்.4) நடைபெறும் அரசு விழாவில் ‘என் கனவு என் எதிர்காலம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.
காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் குறித்த விளக்கப் படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் செயலாக்கம் குறித்து ஒரு மாவட்ட ஆட்சியர் மற்றும் இரு பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.
தொடர்ந்து, ‘என் கனவு என் எதிர்காலம்’ திட்டத்தையும், இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைக்கும் முதல்வர், 1.80 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முன்னதாக, செஞ்சி சாலையில் ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
