உலக பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…. முழுத் தகவல்கள்

 உலக பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…. முழுத் தகவல்கள்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தைப்பூச நாளில் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே வடலூரில் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

வடலூர் சத்தியஞானசபையில் வருகிற 18ஆம் தேதி முதல் 151-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது.

வடலூர் சத்தியஞானசபை திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 18.01.2022 அன்று நடைபெறும் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்தர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டிலிருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின்  மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது..

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு  சத்தியஞானசபை பெருவெளி மற்றும் ஜோதி தரிசனம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அனைத்து வகை கடைகளுக்கும், ராட்டினம் முதலான பொழுதுபோக்கு செயற்பாட்டிற்கும் அனுமதி கிடையாது. மேலும் ஜோதி தரிசன நாளன்று மது மற்றும் இறைச்சி கடைகளை திறக்கக்கூடாது.

சென்னையில் உள்ள வள்ளலார் இல்லத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறைந்த அளவில் பக்தர்களுக்கு அனுமதி. உணவு பார்சலில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் பிறந்த தினம் மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் வள்ளலார் இல்லத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் நாளை தைப்பூசம் அன்று கோவில்களில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

தைப்பூசத்தின் சிறப்புகள் என்ன? பார்ப்போம்…

தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்குக் கொண்டாடப்படும் விழா வாகும். தை மாதம் தமிழர்களுக்குப் புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திர மாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படு கிறது.

சிறப்புகள்

தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

முருகன் தமிழ்க்கடவுள். முருகன் என்றால் அழகு. முருகன் தேவசேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாகப் பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள்செய்து, நடராஜரை இரணிய வர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத் தன்றுதான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச விரத முறை

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடு வர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்குப் பிறகு கோவிலில் அன்னதானம் வழங்கப் படும். மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.

பழனியில் (இந்தியா) தைப்பூசம்

பழனி (திருவாவினன்குடி – சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவில். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர் களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பல நாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிச்சிந்து என்று அழைக்கப்படு கின்றன. காவடிகளில் பல வகை உண்டு.

அலகு குத்துதல் – நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தீர்த்தக் காவடி – கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

பறவைக் காவடி – அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படு கிறார்.

பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மச்சக்காவடி – மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

வடலூரில் (இந்தியா) தைப்பூசம்

கடலூர் மாவட்டம், வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

ஈழத்தில் தைப்பூசம்

தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப் பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

மலேசியாவில் தைப்பூசம்

பத்துமலை முருகன் கோவில்

மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயம். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளா லான மலை. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ்பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவி லிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலை யில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக் கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக் கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.

பினாங்கு தைப்பூசம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படு கிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடு கிறார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்

மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிர மணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .

சிங்கப்பூரில் தைப்பூசம்

சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா. தைப்பூசத் திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல்தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாகத் தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

மொரீஷியசில் தைப்பூசம்

சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்கள் இங்கும் உண்டு.

இரேயூனியன் ரீயூனியன் தைப்பூசம

காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

தென்னாப்பிரிக்கா தைப்பூசம்

தைப்பூசத் திருவிழா காவடி விழா டர்பன் (கிளேர்வுட் ஸ்ரீ சிவா சூப்ரமோனியர் கோயில்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரங்களில் கொண்டாடப்படுகிறது.

பிஜியில் தைப்பூசம்

பிஜியில், நாடி என்னுமிடத்தில் அமைந்துள்ள உள்ள ஸ்ரீ சிவா சுப்ரமண்ய சுவாமி கோவி லில் தைபுசம் விழா கொண்டாடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்

இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.

தைப்பூசம் 40 ஆன்மிகத் துளிகள்….

1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.

3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும் போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

4. தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.

5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப் பணிகள் செய்தான். அவன் நடராஜப் பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.

6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர் களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.

7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம். எனவே தைப் பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்துவரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்தப் பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.

9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக் கிறார்கள்.

10. முருகப் பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.

11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.

13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.

15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான்.

16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச் சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.

21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லைவாழ் அந்தணர் மூவாயிர வர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானை யைச் சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்துமலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டுமே.

26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசை யாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.

29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப்பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப்படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத்தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலா யுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடுகிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

35.திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப் பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.

36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங் குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.

37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்தி வேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.

38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.

39. சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.

40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத்துறைக்கு வந்து, தீர்த்த வாரி கண்டு வீதிவழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக் கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக்கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...