பால புரஸ்கர் சாகித்ய விருது, கலைஞர் விருது இணையருக்கு இணையான விருது

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேசுக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன், சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்துவரும் படைப்பாளியாகவும் தொடர்ந்து இயங்குகிறார்.

அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகளைச் சொற்சிக்கனத்தோடு படைப்புகளாக்கி வருவது இவரது இயல்பாகும்.முருகேஷின் படைப்புகளில் இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர்.

முருகேஷ் எழுதிய நூல்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐக்கூவிற்கு ஒரு தனியிடம் உருவாக்குவதற்காக முயன்றவர்களில் முருகேஷும் ஒருவர் எனலாம். தமிழக அரசின் சமச்சீர் பாடத் திட்டக் குழுவில் இடம்பெற்று முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கத்திலும் முருகேஷ் பங்களிப்பு செய்துள்ளார்.

கேரள மாநில அரசின் அழைப்பின் பேரில் திருச்சூரில் நடைபெற்ற எழுத்தச்சன் விழாவின் கவிதை வாசிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். 2012-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலகச் சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்றார். 2013-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகப் படைப்பாளர் கள் கருத்தரங்கில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்கேற்றார். விசயவாடாவில் இந்திய அரசின் சாகித்திய அகாதமி நடத்திய ‘சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியும் போக்கும்’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில் பங்கேற்று கட்டுரை வாசித்தார்.

குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருதுக்காக 2021ஆம் ஆண்டு கவிஞர் மு.முருகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கவிதை, சிறுகதை, ஹைகூ, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டு களாக மு.முருகேஷ் எழுதி வருகிறார். 2010ஆம் ஆண்டு முருகேஷ் எழுதிய குழந்தைகள் சிறுகதைகள் என்ற நூல் தமிழக அரசின் புத்தக பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகியது.

கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் கலை இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். இதுவரை 42க்குகும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், விமர்சன நூல்களைப் படைத்துள்ள இவர், தனது நூல்களுக்காக 25க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

இதனிடையே ,இவர் துணைவியார் எழுத்தாளர் கவிஞர் அ.வெண்ணிலா சென்னை புத்தகக் கண்காட்சி 2021 ஆம் ஆண்டு “கலைஞர் பொற்கிழி விருது”க்குத் தேர்வாகி யுள்ளார்.

மு.முருகேஷ் – அ. வெண்ணிலா … இந்தக் காதல் இலக்கிய இணையருக்கு பேரன்பின் பெருமகிழ்வின் வாழ்த்துப்பூச்செண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!