முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் துர்கா எனும் நான்

 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் துர்கா எனும் நான்

தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், 6-10-2021 அன்று இரண்டு நாள்கள் திருச்சியில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் முதல்வராக வெற்றிபெற்ற வேண்டுதல் நிறைவேறியதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக வந்து சமயபுரத்தில் மாரியம்மன் கோயிலில் பிரார்த்தனையை நிறைவேற்றி யிருக்கிறார்.

திருச்சியில் நடக்கும் பொதுக்கூடத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று 6-10-2021 காரில் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். பின்னர் அவர் சமயபுரம் அருகே ‘இருங்களூர் கைகாட்டி’ பஸ் நிறுத்தத்தில் காரில் இருந்து இறங்கினார். அங்கிருந்து சென்னை- திருச்சி நெடுஞ்சாலை வழியாக சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், கடைவீதி, சன்னதி வழியாக சுமார் 7 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சமயபுரம் மாரியம்மன் கோவிலை இரவு 7.20 மணிக்குச் சென்றடைந்தார். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு அம்மனின் சன்னிதிக்கு முன்பு நின்று 15 நிமிடங்கள் கண்ணை மூடி  தரிசனம் செய்ததோடு  தன் குடும்பத்தினர் பெயரில் விசேஷ அர்ச்சனையும் செய்தார். ஸ்ரீரங்கம், வெக்காளியம்மன் கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் கே.என் நேருவின் மனைவி அவரது மகள்கள் பாத யாத்திரையில் கலந்துகொண்டனர்.

துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன், வெக்காளியம்மன் கோயில் களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அமாவாசையன்று மாரியம் மனை வழிபட்டு நேர்த்திக்கடன் வைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலைக்குச் சென்று பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து வழி பட்டார் துர்கா. துர்கா ஸ்டாலினின் நம்பிக்கையும் வேண்டுதலும் நிறைவேறி விட்டது. சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராகி விட்டார். கணவர் முதல்வராக பதவியேற்றதை கண்களில் நீர் கசிய பார்த்து ரசித்தார் துர்கா ஸ்டாலின்.

ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள வீட்டில் முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு முதல்வராகப் பதவி ஏற்றவுடன் திருமலை திருப்பதி கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் வேத பண்டிதர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். ஸ்டாலின் முன்னிலையில் வேத மந்திரங்களை ஓதினர். லட்டு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கியும் வேத ஆசிர்வாதம் கூறியும் வாழ்த்து தெரிவித்தனர். இது நாத்திக கட்சியான தி.மு.க. வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அத்திவரதர், ஏழுமலையான், பழனி தண்டாயுதபாணி என கோவில் கோவிலாக வலம் வரும் துர்கா ஸ்டாலின் திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில் களுக்கும் சென்று வந்தார். இப்படி கோவில் கோவிலாக துர்கா ஸ்டாலின் செல்லும்போது மகள் மற்றும் பேத்திகளுடன் தமிழகம் மட்டுமன்றி பிற  மாநிலக் கோயில்களிலும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.

ஆன்மிகத்தைப் போலவே ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் துர்கா ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்டாலின் செல்லும்போது உடன் செல்லும் துர்கா அங்குள்ள பிரபல ஆலயங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருகிறார்.

முன்பு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வேண்டிக்கொண்டார். திருச்செந்தூரிலிருந்து திருவாரூர் வரைக்கும் உள்ள அனைத்து ஆலயங் களுக்கும் சென்று தரிசனம் செய்தார். அதேபோல் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் துர்கா ஸ்டாலின். தை அமாவாசைகளில் திருவாங்கூர் ஆலயங்களில் நடக்கும் பதினோரு கருட சோவைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவந்தார். அதேமாதிரி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருக்கிற வானமாமலை பெருமாள் கோவில், எட்டு சுயம்பு க்ஷேத்திரங்களில் முதன்மையானது.  இங்கு தரிசனம் செய்தார். கொரோனா தளர்வு அறிவித்த வுடன் இந்த நேர்த்திக் கடன்களை ஒவ்வொன்றாகச் செய்து முடித்தார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக் கப்பட்டவுடன் திருவண்ணா மலை சென்று வேண்டுதலை நிறைவேற்றினார். அடுத்து திருச்செந்தூருக்குச் சென்று சுப்ரமணிய சுவாமியை வழிபட்டார். சண்முகர், வள்ளி தெய்வானையை வழிபட்டார் துர்கா ஸ்டாலின். திருச்செந்தூருக்கு துர்கா சாமி தரிசனம் செய்ய வந்திருந்தபோது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனும் சந்தித்து பேசினார்.

மயிலாடு துறை மாவட்டம், திருவெண்காடு ஊரைச் சேர்ந்தவர்தான் துர்கா. இவரது குலதெய்வ  கோயிலான  பூம்புகார்  அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் ஆலயத்தை புதுப்பித்து கட்டி வருகிறாராம் துர்கா ஸ்டாலின். திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக விரைவில் கட்டடம் கட்டித் தரப்போகிறாராம் துர்கா ஸ்டாலின். இதற்காக இடமும் பார்த்திக்கிறாராம். இதைத் தவிர பெருமாள் பக்தையான துர்கா, கோவிலும் கட்டப்போவதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. இதற்காக பெருமாள் சிலை செய்யவும் ஆர்டர் கொடுத்திருக் கிறாராம். இதைத்தவிர சொந்த ஊரில் கோவிலும் கட்டி வருகிறார்.

தமிழக ஆலயங்களில் நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் விரைவில் காசி, கேதார்நாத்  போன்ற  ஆலயங்களுக்குச் சென்று நேர்த்திக்டன் செலுத்தப்போவ தாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினர்களுடன் காசி சென்றிருந்தார். காசிக்குச் சென்றுவிட்டு வருமாறு குடும்ப ஜோசியர் கூறியதைக் கேட்டுத்தான் அப்போது சென்றிருந்தார் துர்கா. அப்போது, துர்கா ஸ்டாலினுடன் அவருடைய அக்கா பார்வதி, தங்கை ஜெயந்தி மற்றும் பார்வதியின் கணவர் உள்பட குடும்ப உறவினர்களுடன் காசி சென்றவர் காசி விஸ்வநாதரை வணங்கிவிட்டு வேண்டுதல் வைத்துவிட்டு வந்தார்.

அவரது வேண்டுதல் இப்போது நிறைவேறியிருப்பதால் மீண்டும் காசி சென்று வேண்டுதலை நிறைவேற்றப் போகிறாராம். கேதார்நாத் சிவ ஆலயம், நேபாளம் பசுபதிநாதர் ஆலயங்களுக்கும் சென்று நேர்த்திக்கடன் செலுத்தப் போகிறாராம் துர்கா ஸ்டாலின். வெகு விரைவில் மேலும் வட மாநிலங்களுக்கு ஆன்மிக  தரிசனம்  செல்லப்போகிறார்  துர்கா.

கடந்த ஜூலை மாதம் காமாட்சி அம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். ஆஸாட நவராத்திரியை முன்னிட்டு  காமாட்சி அம்மனையும் வராஹி அம்மனையும் தரிசனம் செய்வது சிறப்பு.

ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்வில்  ஏற்படக்கூடிய  எதிர்ப்புகளை  நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள் என்கிறது ஆன்மிகத் தத்துவம்.

“எங்களது குடும்பம் பகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும்கூட சாமி வழிபாடு செய்வதை எங்கள் குடும்பத்தில் எவரும் தடுப்பதில்லை” என்று ஏற்கெனவே கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்திருந்தார் துர்கா.

இந்துக்களின் எதிரி தி.மு.க. என்று கூறி தமிழக மக்களிடமிருந்து தி.மு.க. வைத் தனிமைப்படுத்த நினைத்து, வேல் யாத்திரை நடத்தி ஓட்டு வாங்க நினைத்திருந்த பா.ஜ.க. இப்போது மிரண்டுபோய் இருக்கிறது. முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் திருப்பதியிலிருந்து  பிராமணர்கள் வந்து வேதம் ஓதினார்கள். ஒரு கூட்டத்தில் ஸ்டாலின் வேலை ஏந்தினார். தி.மு.க.வின் அடுத்தகட்டத்  தலைவர்கள் பலர் தேர்தலின்போது ஆலயப் பிரவேஷம்  செய்தனர். இதையெல்லாம் பார்த்து அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் மிரண்டுபோய் போய் எதிர் அஸ்திரத்தைப் பிரயோகிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக் கிறார்கள். துர்கா ஸ்டாலின் என்கிற ஆன்மிகவாதி தி.மு.க. என்கிற நாத்திக கூடாரத்தில் ஆன்மிக ஒளி ஏற்றி வைத்திருக்கிறார்.

ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் என்கிற கொள்கையை வகுத்த தி.மு.க.வைத் தோற்றுவித்த அண்ணா புன்னகை பூக்கிறார்.

தாய்க்கழகமான திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த தமிழர் தந்தை பெரியார் கையிலிருப்பது தைத்தடியா? வேலா? சரியாகத் தெரியவில்லை.

மூலவன்

1 Comment

  • வணக்கம், பசுத்தோல் போர்த்திய புலி இடத்தில் அகப்பட்ட அகிம்சை இந்துக்கள். இந்துக்களின் கண்ணீரை துடைக்க அவர்கள் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் நின்று கொல்லும். அவர்கள் கோழைகளும் அல்ல , முட்டாளும் அல்ல. மனுநீதிச் சோழன் கதை கேட்டு வளர்ந்த பிள்ளைகள். அவர்கள் விரும்புவது அத்துறை தான் நடப்பதோ அநீதித்துறை.
    எதிரியை முதுகுக்கு பின்னால் குத்தும் பரம்பரை அல்ல. எனவே தான் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள் நம் முன்னோர்கள். அதைத் தான் இப்போது பார்க்கிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது அறிக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...