திருப்பாவை பாசுரம் – 11

🌹 🌿 திருப்பாவை பாசுரம் 11

திருப்பாவை பாசுரம் – 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

விளக்கம்:
பத்தாவது பாசுரத்தில், ராமபிரானால் தோற்ற கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்குக் கொடுத்துவிட்டுச் சென்றானோ என்று, எவ்வளவு எழுப்பியும் துயில் கலையாத தோழியைப் பார்த்துக் கேட்ட ஆண்டாள், பதினோராவது பாசுரத்தில் கண்ணன் திருநாமங்களை உரக்கப் பாடுகிறோம்; அது காதில் கேட்டும் சலிக்காமல் உறக்கத்தில் கிடக்கிறாயே? என்று வினவுகிறார்.

கன்றுகளோடு கூடிய பசுக்களின் கணங்களைக் கொண்டிருப்பவர்கள் இந்த கோபாலர்கள். அவர்கள் பசுக்களின் பாலைக் கறப்பவர்கள், எதிரிகளின் செருக்கும் வலிமையும் அழியும்படி படையெடுத்துச் சென்று போர் புரிபவர்கள்.

குற்றம் எதுவும் இல்லாத நற்குடியில் பிறந்தவர்கள். அத்தகைய கோபாலர்களின் குடியில் பிறந்த பொன்கொடி போன்றவளே.! புற்றில் இருந்து எழுந்தாடும் பாம்பின் படம் போன்ற அல்குலையும், காட்டில் தன் இச்சைப்படி திரியும் மயிலைப் போன்ற சாயலும் கொண்டவளே. செல்வ வளம் மிக்க பெண் பிள்ளையே. நீ எழுந்து வருவாயாக. நம் சுற்றத்தினைச் சேர்ந்தவர்களும் தோழிகளும் ஆகிய அனைவரும் திரண்டு வந்து நிற்கின்றோம்.

உனது திருமாளிகையின் முற்றத்தே புகுந்து காத்திருக்கின்றோம். கார்மேக வண்ணன் கண்ணனின் திருநாமங்களை உரக்கப் பாடியும், அது உன்காதில் விழுந்தபோதும் அதுகேட்டும் கேட்காததுபோல் இருக்கிறாயே. இவ்வாறு நாங்கள் பாடுவதைக் கேட்டும், நீ சலிக்காமலும் ஒன்றும் பேசாமலும் உறங்கியபடி கிடப்பதால் என்ன பலன் ஏற்படப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை!

என்று கூறி செல்வ வளம் மிகு நங்கையைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!