இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக கொதித்தெழுந்த உலக பிரபலங்கள்..!

 இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக கொதித்தெழுந்த உலக பிரபலங்கள்..!

உலக அளவில் உள்ள பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து All Eyes On Rafah என தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால் அவை உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.  இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.  இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.  இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.  வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.  இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.  இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இரு நாடுகளும் போரை கைவிடவில்லை.  இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா கூட,  முக்கிய வெடி குண்டுகளை இனி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டது.

இருப்பினும் போர் தொடர்ந்து வருகிறது.  இதனிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காசாவின் ராஃபா பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தல் அல் – சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.  இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் கணித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என காசா சுகாதாரத் துறை தெரிவித்தது. இந்த தாக்குதலை இஸ்ரேலும் உறுதி செய்தது.  ஆயிரம் பேர் இருந்த இந்த முகாமில் 2 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. தல் அல் – சுல்தான் பகுதியை நிவாரண பகுதியாக இஸ்ரேலே அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது.

இதன்மூலம் இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்தது.  இதனையடுத்து,  திங்கள்கிழமை இரவும் ராஃபாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் பீரங்கி குண்டுகள் மற்றும் விமானங்கள் மூலம் தாக்கியது.  தொடர்ந்து, சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ராஃபா நகரின் மையப் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளதையடுத்து,  அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.  அப்பகுதி மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களின் உடல்களை வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா உட்பட உலகின் பல பிரபலங்கள் All Eyes on Rafah என்கிற சொல்லாடலை பயன்படுத்தி ராஃபா எல்லையில் உள்ள அகதிகள் முகாமின் படங்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த இணைய பிரசாரம் மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தீவிரமடைந்துள்ளது.

இந்திய அளவில் சினிமா நடிகர்களான வருண் தவான், அலி கோனி,  சமந்தா  மற்றும் திரிப்தி டிம்ரி, துல்கர் சல்மான், ஷானே நிகாம்  உட்பட  பல பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் ஸ்டோரிக்களில்  “ஆல் ஐஸ் ஆன் ரஃபா”  என்கிற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் ,  பிரிட்டிஷ் பாடகி லீ-ஆன் பின்னோக், மாடல் பெல்லா ஹடிட் மற்றும் நடிகைகள் சாயர்ஸ்-மோனிகா ஜாக்சன் மற்றும் சூசன் சரண்டன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த பிரசாரத்தில் இணைந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...