இன்று மாலை முதல் குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி..!

 இன்று மாலை முதல் குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி..!

குற்றாலம் பிரதான அருவியில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும்,  பழைய குற்றால அருவியில் காலை முதல் மாலை வரை குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அடுத்து திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்தத் தடை 7-வது நாளாக நேற்றும் நீடித்தது.

நேற்று (மே 23) குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். குற்றாலம் பிரதான அருவியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் வெள்ளத்தின் போது அபாய ஒலிகளை முன்கூட்டியே ஒலிக்கச் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் உடை மாற்றும் அறை, தரைத்தளம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்ட ஆட்சியர் அந்தப் பணிகளை விரைவாக முடித்திட உத்தரவிட்டார்.

இந்நிலையில் பிரதான அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று (மே 24) பிற்பகல் 4.00 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் காலை 6.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நீராட அனுமதிக்கப்படும். வாகன நிறுத்தத்திற்கான அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனம் நிறுத்தப்பட வேண்டும்.

ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக விலக்கி கொள்ளப்படுவதாகவும், அணைக்கட்டு பகுதிகளில் நீராட தடை தொடர்ந்து நீடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...