வரலாற்றில் இன்று – 02.12.2019 – ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட்

வரலாற்றில் இன்று – 02.12.2019 – ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட்
மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார்.
ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்தச்சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 
இவர் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தச்சோகை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தவர். உணவுப் பழக்கங்களே இதற்கு காரணம் என்பதையும் கண்டறிந்தார். புற்றுநோயின் பல்வேறு வகைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
வில்லியம் மர்பி, ஜார்ஜ் விம்பிள் ஆகியோருடன் இணைந்து, இவர் குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட பெர்னீஷியஸ் ரத்தச்சோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இதற்காக இவர்களுடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1934ஆம் ஆண்டு பெற்றார்.
வாழ்நாள் முழுவதும் ரத்தச்சோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கிய ஜார்ஜ் மினாட் 1950ஆம் ஆண்டு மறைந்தார்.
தேசிய மாசு கட்டுப்பாடு தினம்
தேசிய மாசு கட்டுப்பாடு தினம் டிசம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. போபால் நச்சுவாயு விபத்தில் மரணமடைந்தவர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
தொழிற்சாலை பேரிடர்களைத் தடுப்பது, அவற்றை கையாளுவது பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மற்றும் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இன்று உலக மாசு தடுப்பு தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
உலக கணினி கல்வி தினம்
உலக கணினி கல்வி தினம் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கணிப்பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாக செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம் ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!