‘ஜெய்ஸ்ரீராம்’ அன்னபூரணி பட சர்ச்சை:மன்னிப்பு கேட்ட நயன்தாரா | சதீஸ்

 ‘ஜெய்ஸ்ரீராம்’ அன்னபூரணி பட சர்ச்சை:மன்னிப்பு கேட்ட நயன்தாரா | சதீஸ்

அன்னபூரணி திரைப்படம் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனது படம், பார்வையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி, ஓம், ஜெய்ஸ்ரீராம் என தொடக்கமிட்டு  நடிகை நயன்தாரா மன்னிப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கூறி “அன்னபூரணி” படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி அன்னப்பூரணி என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இது  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சர்ச்சையையும் உருவாக்கியது. இந்த படத்தில் வரும் சில வசனங்கள் காட்சிகள்  இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது என்றும், குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.  இதற்கு இந்து ஆர்வலர்கள் படத்தின் மீதும், நடிகை நயன்தாரா மீதும் புகார் அளித்தனர். இதனையடுத்து Netflix தளத்தில் வெளியான அன்னப்பூரணி படமும் அதிலிருந்து நீக்கப்பட்டது. பல மாநிலங்களிலும் வழக்குகளும் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களிடம் நயன்தாரா மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் ஓம், ஜெய்ஸ்ரீராம் என தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டு அதன்பிறகு தனது மன்னிப்புக்காக காரணத்தை தெளிவுபடுத்தி உள்ளார்.  நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை. இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்றார் நயன்தாரா.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், ஜெய் ஸ்ரீ ராம்… இந்தக் குறிப்பை கனத்த இதயத்துடனும், அன்னபூர்ணி திரைப்படம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடனும் எழுதுகிறேன். அன்னபூரணியை உருவாக்குவது ஒரு சினிமா முயற்சி மட்டுமல்ல, நெகிழ்ச்சியைத் தூண்டும் மற்றும் ஒருபோதும் கைவிடாத உணர்வைத் தூண்டுவதற்கான இதயப்பூர்வமான முயற்சியாகும்.

இது வாழ்க்கையின் பயணத்தை பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டது. அங்கு தடைகளை சுத்த மன உறுதியுடன் கடக்க முடியும் என்பதை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். ஒரு நேர்மறையான செய்தியைப் பகிர்வதற்கான எங்கள் நேர்மையான முயற்சியில், நாம் கவனக்குறைவாக காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். முன்பு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் இருந்து அகற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை. இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் எனது உண்மையான மற்றும் இதயப்பூர்வமான மன்னிப்பைக் கோருகிறேன்.

அன்னபூரணியின் பின்னால் உள்ள நோக்கம் உயர்த்துவதும் ஊக்கமளிப்பதும் ஆகும். துன்பத்தை ஏற்படுத்துவது அல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக திரைப்படத் துறையில் எனது பயணம் நேர்மறையைப் பரப்புவதற்கும், ஒருவருக்கொருவர் கற்றலை வளர்ப்பதற்கும் ஒரு ஒற்றை நோக்கத்துடன் வழிநடத்தப்படுகிறது. மனமார்ந்த வணக்கங்களுடன்…

நயன்தாரா” என பதிவிட்டுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...