தீபாவளி கிடையாது!

எங்களுக்கு தீபாவளி கிடையாது!

ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்துள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்ட 2 வயது சிறுவன் சுர்ஜித் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.ஆழ்துளைக் கிணறுகளுக்காக குழி தோண்டி விட்டு, அவற்றை மூடாமல் அப்படியே விடுவதால் நாடு முழுவதும் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகள், சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக குழியில் விழுந்து விடுகின்றனர்.அவர்களை மீட்க தாயின் பிரசவத்தை விட, மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் இன்னும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தையும்உலுக்கும் சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது 

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இந்த சம்பவம் நேற்று முன் தினம் மாலை 5.40 மணிக்கு நிகழ்ந்தது.


முதலில் குழந்தை 25 அடியில் சிக்கியிருந்தது. பின்னர் 85 அடி ஆழத்திற்கு சென்றது. தற்போது 37 மணி நேரத்தைக் கடந்த நிலையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. தீயணைப்புத் துறையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஆழ்துளைக் கிணறுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், குழி தோண்டி மீட்கும் வல்லுநர்கள் என பலரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கான ராட்சத இயந்திரம் காரைக்கால் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் இருந்து பெரிய லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. இது சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்டும் என்று கூறப்படுகிறது. இந்த லாரி நேற்று இரவு திருச்சியில் இருந்து மணப்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த போது திடீரென பழுதாகி நின்றது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தொழில்நுட்ப குழுவினர், விரைந்து சென்று பழுதை சரிசெய்தனர்.


இந்த சூழலில் நவீன இயந்திரத்தின் மூலம் சிறுவனின் கையில் ஏர் லாக் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் குழி தோண்டும் போது, சிறுவன் மேலும் குழிக்குள் செல்லாமல் தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் வல்லுநர்கள் ஆலோசனைப்படி மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ஆழ்துளைக் கிணறுக்கு அருகே 2 மீட்டர் தொலைவில் குழி தோண்டப்பட்டு வருகிறது.

ஒரு ஆள் இறங்கும் அளவிற்கு 1 மீட்டர் அகலத்தில் குழி தோண்டப்படுகிறது. இதன் வழியாக 3 தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சென்று குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று இரவு முதல் தயாராக இருக்கின்றனர்.

இந்நிலையில் சுர்ஜித் எப்படியும் மீண்டு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவே எங்களுக்கு தீபாவளி பரிசு, தீபாவளி கொண்டாட்டம் என்று தெரிவித்து வருகின்றனர்.


இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் #SaveSurjith என்ற பெயரில் ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றில் சுர்ஜித் மீண்டு வர பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுர்ஜித்தை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து, தமிழக மக்கள் தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!