ஆணவக்கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’! | தனுஜா ஜெயராமன்

 ஆணவக்கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’! | தனுஜா ஜெயராமன்

இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ்.

இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நடித்திருக்கும் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் மேலும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதுவே முதல் திரைப்படம்.

இக்கதை பல உண்மை சம்பவங்களை தழுவி நகர்கிறது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சாதியை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் ஒற்றை கருத்துக்களுடனும், ஒரு தரப்பினை தற்பெருமை சொல்லியும் அல்லது  அதற்கு மாறாக கருத்துகளையும் தெரிவித்த வண்ணமே  இருக்கிறது.

ஆனால்  இக்கதை சற்று வேறுபட்டு சாதியை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் அதன் கொடுமைகளை   கண்டுக்கொள்ளாமல் இருப்பவர்கள், தெரியாதவர்கள், புரியாதவர்கள்  என்று குழம்பி நிற்கும் சாமானிய மக்களின் கருத்தோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.

இப்படத்தை பார்த்து முடிக்கும்போது பார்வையாளருக்கு அவர்களின் சாதிய நிலைப்பாட்டை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கின்றது.

கோமதி துரைராஜ் தயாரிப்பில் ‘ஷார்ட்பிளிக்ஸ்’ வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.

படத்தின் மைய கதாபாத்திரத்தில்

பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர். பாடல்களுக்கு ஆல்வின் இசை அமைத்துள்ளார். கெவின் பின்னணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தர்மதீரனும், கலையை மோகன்குமார் தங்கராஜும் கவனித்துள்ளனர்.

டிசம்பரில் ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில்

‘நவயுக கண்ணகி’ வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த பல தகவல்களை இயக்குநர் கிரண் துரைராஜ் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அன்று,

பாண்டிய மன்னனின் அர்த்தமற்ற  தீர்ப்பில் தன் கோவலனை இழந்த கண்ணகி மதுரையை பழிதீர்க்க எரித்தாள் .

இன்று,

அர்த்தமற்ற ஆணவ படுகொலையில் தனது காதலனை இழக்கிறார்,சுவாதி.

அவளை கட்டாய படுத்தி  திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலனை இழந்த சுவாதி திருமணத்திற்கு பின் பழிதீர்க்க நவயுக கண்ணகியாய் எடுக்கும் தொடக்கமே கதையின் கரு !! இத்திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் டிசம்பரில் ஷார்ட்ஃபிளிக்ஸ் ( ShortFlix) ஓடிடி-யில் வெளியாகவுள்ளது

வேலூரை பூர்வீகமாக கொண்ட தமிழன் நான். இப்பொழுது பெங்களூரில் இருக்கிறேன்.

சினிமாவிற்குள் நுழைய நல்ல தொடர்புகள் கிடைக்காத காரணத்தால் தான் குறும்பட பாதையை தேர்ந்தெடுத்தேன். ஜிகர்தண்டா முதல் பாகம் வெளியானபோது தான் சினிமா மீதான ஈர்ப்பு அதிகமானது. 2015லேயே பெங்களூரு பள்ளியில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்கிற குறும்படம் எடுத்து அப்போதே யூ ட்யூபில் வெளியிட்டேன். அதன்பின் மாநகரம், சூப்பர் டீலக்ஸ் பாணியில் ஒரு ஹைபர்லிங்க் படம் ஒன்றை இயக்கினேன். அதற்காக 35 நிமிடம் பைலட் பிலிம் ஒன்றையும் இயக்கினேன், அதைத்தான் திரைப்படமாக இயக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் பட்ஜெட் காரணமாக அது செட் ஆகவில்லை.

அது ஒரு காரணம் என்றாலும் நான் படமெடுக்க இங்கே வந்த பின்பு சந்தித்த மனிதர்கள் பெரும்பாலானோர் நம்மிடம் பேசிப்பேசியே நம் ஜாதியை பற்றி தெரிந்துகொண்டு அதன்பிறகு நம்மைப் பற்றி அவர்களாகவே ஒரு கணிப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் இந்த களத்தில் உள்ள ஒரு கதையை படமாக்க வேண்டும் என இந்த படத்தை துவங்கினேன். கதை பெங்களூருக்கு அருகிலேயே நடந்த, என்னை ரொம்பவே பாதித்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது

இயக்குநர்கள் பா,ரஞ்சித், மோகன்.ஜி ஆகியோர் ஜாதியை பற்றி தங்களது கோணத்தில் வெவ்வேறு பாணியில் படம் எடுத்து வருகிறார்கள். நானும் இந்தப்படத்தை துவங்கியபோது ஒரு தரப்பினரின் சார்பாக தான் கதையை கொண்டுசெல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய சொந்த ஊருக்கு சென்றபோது நான் பார்த்து அனுபவத்தில் உணர்ந்த பல விஷயங்கள் எனது கருத்தை மாற்றிக் கொள்ள வைத்தன. அதனால் இதில் இருதரப்பினர் பற்றிய நியாயமான மற்றும் நியாயமற்ற விஷயங்களையும் சமமாக பேசியிருக்கிறேன். இந்த படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஜாதியை பற்றிய உங்களது கண்ணோட்டம் என்னவாக இருக்கும் என்பது ஒரு பார்வையாளராக உங்களுக்கே தெரியவரும்.

பொதுவாக இதுபோன்ற கதைகளில் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆணின் தரப்பிலிருந்து தான் கதை சொல்லப்படும். ஆனால் நான் மாப்பிள்ளையின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை காட்டியுள்ளேன். வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகியவை கதையின் களங்களாக இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று ஊர்களும் மூன்று விதமான மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கின்றன.

என்னுடைய சொந்த ஊரான வேலூரில் தான் படப்பிடிப்பை நடத்தினோம்.. நானே இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் படத்தொகுப்பையும் செய்துள்ளேன், இங்கே நுழைந்த புதிதில் தமிழில் பேசினால் கூட என்னை கன்னடக்காரனாகவே பார்த்தார்கள். அதனால்தான் என்னுடன் குறும்படத்தில் இருந்தே இணைந்து பயணிப்பவர்களை இதில் இணைத்து கொண்டேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருமே பெங்களூரைச் சேர்ந்த தமிழர்கள் தான். அதேசமயம் சினிமாவுக்கு புதியவர்கள் என்றாலும் அனைவரும் மேடை நாடக கலைஞர்களும் கூட.

படப்பிடிப்புக்கு முன்னதாக படத்தின் நட்சத்திரங்களை வைத்து ஒரு மாதம் ஒத்திகை நடத்தினோம்.

இந்த படத்தில் சில துணிச்சலான காட்சிகள் இருக்கின்றன ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் இதில் நடித்த நடிகை அதன்பிறகு வரவில்லை. அதன் பின்னர் தேர்வானவர் தான் பவித்ரா தென்பாண்டியன். இவர் நாடக உலகை பின்னணியாக கொண்டவர்.

இவரது கேரக்டர் ரொம்ப ‘போல்டாக’ இருக்கும்.

தான் காதலித்தவனை, ஆணவ கொலை என்ற பெயரில் கொலை செய்கிறார்கள்.

அதன் பின் கட்டாய படுத்தி அவளுக்கு வேறு கல்யாணமும் செய்து வைக்கிறார்கள். தன் கண்முன் தனது காதலனை கொலை செய்தவர்களை பழிதீர்க்க நினைக்கிறாள். அதை முதலிரவு முதலே செயல் படுத்துகிறாள். அவள் எடுத்த முடிவை, செயலை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?!

இதை துணிச்சாலோடு செய்திருக்கிறார் நாயகி பவித்ரா தென்பாண்டியன்.

இந்த உலகில் எங்கோ ஒரு மூலையில்.. பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண் எடுத்த உண்மையான முடிவுதான் இப்படம்.

என்ன முடிவு??!

டிசம்பர் மாதம் ‘SHORTFLIX’ OTT தளத்தில் பாருங்கள்.

விமல்குமார், டென்சில் என இன்னும் சிலரும் இதே போல நாடக அனுபவத்துடன் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

ஒன்னே முக்கால் மணி நேரம் ஓடும் படமாக இது உருவாகியுள்ளது. தமிழில் மட்டுமே இந்த படத்தை உருவாக்கி உள்ளோம் படப்பிடிப்பு சமயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.  ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. டிசம்பர் 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடுவதற்காக பல ஓடிடி நிறுவனங்களை அணுகியபோது புதியவர்கள் என்பதால் பலரும் மறுத்தனர். ஆனால் ஷார்ட்பிளிக்ஸ் நிறுவனம் தான், இதை ஏற்றுக்கொண்டதுடன் படத்திற்கு கூடுதல் மதிப்பு ஏற்படும் விதமாக பிரபல பின்னணி பாடகிகள் சின்மயி, சைந்தவி உள்ளிட்டோரை பாட வைத்து, படத்திற்காக ஒரு தொகையையும் தங்கள் பங்கிற்கு செலவழித்து எங்களுக்கு உற்சாகம் அளித்தனர். இளைஞர்களின் ஆதரவை நம்பித்தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம்

அடுத்ததாக சீரியல் கொலை, அதற்கடுத்து கால்பந்து அரசியல் பற்றி படங்கள் இயக்க உள்ளேன். பெங்களூருவில் இருப்பதைப் போல இந்தியாவிலேயே வேறு எங்கும் கால்பந்து வீரர்கள் இல்லை. ஆனால் அதில் இடம்பெற்று பெருமை சேர்ப்பவர்கள் தமிழர்கள். அதில் நிறைய அரசியல் இருக்கிறது. அதைப்பற்றி பேச இருக்கிறேன்” என்கிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...