விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியானது “லியோ’ திரைப்படம். இப்படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் படம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளதாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக தமிழ்நாட்டில் முதல் காட்சி முடியும் முன்பே, பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சில பைரசி தளங்கள் மற்றும் சில செயலியில் இப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். இது படக்குழுவினருக்கும் , விஜய் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
