சீரியசாக கதை சொன்ன அருவி மதனுக்கு நடிகை ஷீலா ராஜ்குமார் கொடுத்த அதிர்ச்சி! | தனுஜா ஜெயராமன்

 சீரியசாக கதை சொன்ன அருவி மதனுக்கு நடிகை ஷீலா ராஜ்குமார் கொடுத்த அதிர்ச்சி! | தனுஜா ஜெயராமன்

கடந்த 2015ல் வெளியான அருவி திரைப்படம் திறமையான பல கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு வெளிச்சம் போட்டி காட்டியது. அந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் மதன்குமாரை, அருவி மதன் என அழைக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அயலி, துணிவு, அயோத்தி, பம்பர், மாமன்னன், மாவீரன் என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் அருவி மதன். தற்போது ‘நூடுல்ஸ்’ என்கிற படத்தின் மூலம் ஒரு இயக்குநராக உருவெடுத்து அவருக்குள் இருக்கும் படைப்பாளியையும் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ROLLING SOUND PICTURES சார்பில் அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் பிரபலமான நடிகர் ஹரீஷ் உத்தமன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

டூ லெட், மண்டேலா உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களது மகளாக ரவுடி பேபி புகழ் ஆலியா நடிக்க, அருவி மதனும் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த கதை உருவான விதம், இதில் ஹரீஷ் உத்தமன் எப்படி உள்ளே வந்தார் என்பது உள்ளிட்ட புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அருவி மதன்.

“சில வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய சீதாயணம் என்கிற குறும்படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டினார் நடிகர் ஹரீஷ் உத்தமன். அதைத் தொடர்ந்து இயக்குனராகும் முயற்சியில் தெலுங்கு முன்னணி நடிகர் நானிக்காக அப்பா-மகன் ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து ஹரீஷ் உத்தமனிடம் கூறினேன். அதே சமயம் படம் இயக்குவதில் எந்த அனுபவமும் இல்லாமல் நானியை எப்படி அணுகுவது என்று தயங்கி நின்ற சமயத்தில் தான், கொரோனா தாக்கமும் துவங்கியது. அந்த சமயத்தில் தான் இந்த நூடுல்ஸ் கதையை எழுதினேன்.

இந்தக்கதையை ஹரீஷ் உத்தமனிடம் கூறியபோது, ஜெய் பீம் மணிகண்டன் இந்த கதைக்கு பொருத்தமானவராக இருப்பார் என கூறினார். அதனால் இந்த படத்தில் தற்போது நான் நடித்துள்ள போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஹரீஷ் உத்தமனை கேட்டேன். ஏற்கனவே பல படங்களில் அவர் போலீஸாக நடித்துள்ளதால் இதிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினாலும் எனக்காக நடிப்பதற்கு தயாராக இருந்தார். பின்னர் தான் அவர் கதையின் நாயகனாகவும் நான் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கும் விதமாக சூழல் மாறியது.

அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல நடிப்பு திறமைமிக்க ஒருவரை தேடியபோது தான் டூலெட், மண்டேலா புகழ் ஷீலா ராஜ்குமார் இதற்கு உள்ளே வந்தார்.

இந்த கதையை நான் ஹரீஷ் உத்தமனிடம் கூறியபோது ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒருவித பிரமிப்பினுடனேயே கேட்டுக்கொண்டு இருந்தார். கதையை கூறி முடித்ததும் என்னிடம், “நீங்கள் கதை சொல்ல துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே என் நெஞ்சில் கல்லை தூக்கி வைத்தது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது. குறிப்பாக அந்த கிளைமாக்ஸ்…” என அவருக்கு ஏற்பட்ட அந்த உணர்வை அவர் வார்த்தையால் வெளிப்படுத்திய விதம் எனக்கு மிகப் பெரிய பாராட்டாக அமைந்தது.

அதே சமயம் ஷீலா ராஜ்குமாரிடம் இந்த கதையை கூறும்போதே பல இடங்களில் ரசித்து சிரித்தார். கதையைக் கேட்டுவிட்டு கலகலப்பு 2 மாதிரி இருக்கிறது என அவர் சொன்னபோது என்னடா இவர் இப்படி சொல்கிறாரே என எனக்கே கொஞ்சம் ஷாக்காக தான் இருந்தது. ஆனால் படம் முடிந்து பார்த்தபோது ஹரீஷ் உத்தமன் சொன்ன அந்த பதட்டமும் இருந்தது.. ஷீலா ராஜ்குமார் சொன்ன அதே சிரிப்பு, கொண்டாட்டம் இரண்டும் இருந்தது. பார்த்த எல்லாருக்குமே படம் ரொம்பவே பிடித்திருந்தது. குறிப்பாக சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்கள் இந்த படத்தைப் பார்த்து வெகுவாக பாராட்டினார்” என்றார் அருவி மதன்

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...