அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தாக்க இருக்கும் “ஹிலாரி “ சூறாவளி !

 அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தாக்க இருக்கும் “ஹிலாரி “ சூறாவளி !

உலகெங்கும் பருவநிலை மாறுபாடுகளால் இயற்கையில் பல்வேறு மாறுபாடுகள் வந்த வண்ணம் இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்து கொண்டு தான் இருக்கறார்கள். அதீத வெப்பம், பருவம் தப்பிய மழை , சூறாவளி புயல்கள், ஊரை சூழும் வெள்ள பாதிப்புகள் என பல்வேறு சூழலியல் பாதிப்புகள். இப்படி ஒரு நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த வருடம் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது.

இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஹிலாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று உருவானது. இது கிழக்கு பசிபிக் கடல் பகுதியை நோக்கி விரைகிறது. இந்த சூறாவளி மெக்சிகோ நாட்டிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் கனமழை பொழிவை ஏற்படுத்தலாம் என்றும் ,இந்த முறையும் இது நடந்தால் கிட்டத்தட்ட 84 வருடங்களுக்கு பிறகு ஏற்படும் சூறாவளியாக இருக்கும் என்கிறார்கள்

தற்போதைய நிலவரப்படி, மணிக்கு 140 மைல் (மணிக்கு 225 கி.மீ.) வேகத்தை அடைந்துள்ள இந்த சூறாவளியை 4வது ரகமாக தேசிய சூறாவளி மைய நிபுணர்கள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

இதனால் தென்மேற்கு அமெரிக்காவில் இன்று தொடங்கி அடுத்த வாரம் புதன்கிழமை வரை கடும் புயல் காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இது நாளை, நாளை மறுநாள் மேலும் தீவிரமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புயல் காரணமாக கடுமையான சேதங்கள் உண்டாகலாம் எனவும் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

இந்த சூறாவளி தெற்கு கலிபோர்னியா, தெற்கு நிவேடா, மேற்கு அரிசோனா மற்றும் தென்மேற்கு உட்டா பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சூறாவளி மற்றும் கனமழை எச்சரிக்கையை அடுத்து, மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுவதை தடுக்க மண்மூட்டைகளையும் அடுக்கியும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சமாளிக்க ஜெனரேட்டரையும் தயார் செய்து வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து வசதி தடைபடலாம் என எச்சரிக்கை செய்யபட்டுள்ளது. அவசரகால சேவை அமைப்புகளும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும், மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளையும், அங்கு தேவைப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் சேமித்து, சீராக வினியோகம் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...