காலச்சக்கரம் சுழல்கிறது 12 || திரைத்துறையின் விடிவெள்ளி கதாசிரியர் கலைமணி
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.
1976ஆம் ஆண்டு திரு. எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்கள் தயாரிப்பில் உருவாகி, பாரதிராஜாவின் இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு வெளிவந்த ‘16 வயதினிலே’ படத்தின் வசனகர்த்தாவாக கலைமணி பொறுப்பு ஏற்று தன் திறமை முழுவதையும் பயன்படுத்தி கிராமிய சூழ்நிலையிலேயே உரையாடல் முழுவதையும் எழுதி பாரதிராஜாவின் திரைக்கதைக்கு உயிர் ஊட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது.
பாரதிராஜாவின் செலக் ஷன் எல்லாமே இதுவரை சக்கஸ் தான். ஆம், இந்த மகத்தான வார்த்தையே கலைஞர் எழுதிய ‘பராசக்தி’ திரைப்படத்தில் கேமரா டெஸ்டிற்காக நடிகர் திலகம் பேசிய முதல் வசனம்.
மாருதி ராவ் அவர்கள் தன் கேமராவில் இதைப் பதிவு செய்திருக்கிறார். கலைமணி எனும் பெயர் கொண்ட இவர் உண்மையிலேயே கலை உலகிற்குக் கிடைத்த மணியான மனிதர்தான். அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வசனமும் இன்று வரை சாகாவரம் பெற்றவை. ரஜினியும் கமலும் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த இப்படம் பட்டி தொட்டி மட்டுமல்லாமல் சிட்டியிலும் சிறப்பாக ஓடி வெற்றிக்கனியைப் பறித்தது.
இந்தப் படத்தில் பல பிரபலங்களின் மத்தியில் நம் மதிப்பிற்குரிய இயக்குநர் பாக்யராஜ் அவர்களும் நடித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுக் கூறுவதுதான் நமக்குப் பெருமை. ‘16 வயதினிலே’ படப்பிடிப்பு முடிந்து 1977ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கதாசிரியர் கலைமணி ஒரு நாடகமும் எழுதி முடித்தார். அதுதான் பாரம்பரியம் எனும் நாடகம்..
இதில் டி.கே.எஸ்.சந்திரன் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக வி.ஆர்.திலகமும் நடித்தார்கள். எஸ்.எஸ்.சந்திரனும், சேவா ஸ்டேஜ் துரையும் பிரதான நகைச்சுவை வேடத்தில் நடிக்க, சிவோகம் வைத்தியநாதன் சாந்தாராம் சாந்தினி, சிவகுமார், சூரி போன்ற நடிகர்களும் நடித்த அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
எல்.ஐ.சி.யில் பணிபுரிந்த ஏ.எஸ்.தேசிகன் அவர்கள் டி.எஸ்.சேஷாத்ரி அவர்களின் குழுவில் இருந்து டி.கே.எஸ்.சந்திரன் வெளியே வந்தபோது அவருக்கு ஆதரவாகத் தொடங்கியதுதான் வீனஸ் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் எனும் பெயரில் உருவான நாடகக்குழு. அதில் முதன்முதலில் அரங்கேறிய நாடகம்தான் ‘பாரம்பரியம்’. குறுகிய காலத்திற்குள் நூறாவது நாடகத்தை நடத்தும் பாக்கியம் பெற்றோம்.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சிலம்புச்செல்வர் மா.பொ.சி. அவர்கள் தலைமையில் வி.ஜி.பி. சகோதரர்கள் முன்னிலையில் நூறாவது நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மா.பொ.சி. அவர்கள் தன் தலைமையுரையின்போது டி.கே.எஸ்.சந்திரனும், சேவா ஸ்டேஜ் துரையும் சந்தித்துப் பேசும் உச்சகட்ட காட்சியில் இருவரும் நடித்த நடிப்பு என் கண்களைக் குளமாக்கியது. இந்தக் காலகட்டத்தில் உள்ள எல்லோருமே பார்க்கவேண்டிய நாடகம் ‘பாரம்பரியம்’ என்று சொல்லிப் பாராட்டுத் தெரிவித்தார் சிலம்புச்செல்வர் மா.பொ.சி.
அதே ‘பாரம்பரியம்’ நாடகம் நடிகர் திலகமும் அபிநயசரஸ்வதி சரோஜா தேவியும் ஜோடியாக நடித்து திரைப்படமாக 1993-ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் படம் தோல்வியடைந்தது. 100 நாடகங்கள் வரை நடித்த என் போன்ற நடிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது! கதையின் மூலக்கருவை மாற்றியதுதான் படம் தோல்வி அடையக் காரணம் என்பது பிறகு தெரிய வந்தது.
ஏ.எல்.நாராயணன் திரைக்கதை, வசனம் எழுத, மனோபாலா இயக்கிய அப்படம் சரியாக ஓடாதது கலைமணிக்கும், என் போன்ற கலைஞர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே. இதே கதையை மக்கள் திலகத்தின் நூற்றாண்டில் 2018ஆம் ஆண்டு நாடகமாக நடத்தி அவருக்குச் சமர்ப்பிக்க எண்ணினேன். ஆனால் நாடகத்தின் க்ரிப்ட் யாரிடமும் இல்லாத காரணத்தால் ஒரு சின்னத் தடங்கல் ஏற்பட்டது என்றாலும் நான் தளரவில்லை.
நூறு நாடகங்கள் வரை நடித்ததனால் என் நினைவாற்றலில் அதை மீண்டும் எழுதினேன். கதை, வசனம் கலைமணி, இயக்கம் கலைமாமணி பி.ஆர்.துரை என்ற அறிவிப்போடு ‘கேட்டதும் கொடுப்பவனே’ என்று எம்.ஜி.ஆர். அவர்களின் குணாதிசயத்திற்கு ஏற்றவாறு தலைப்பை மாற்றி அந்த நாடகத்தை அவருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன் என்பதும் 25 நாடகங்கள் வரை அது நடத்தப்பட்டது என்பதும் இந்தக் காலகட்டத்தில் ஒரு சாதனையே! இந்த நாடகத்தைத் தயாரித்த ஏ.எஸ்.தேசிகன் அவர்கள்தான் கோமல் சுவாமிநாதன் எழுதி, இயக்கிய ‘ஒரு இந்தியக் கனவு’ திரைப்படத்தையும் தயாரித்தவர்.
எனது நண்பர் கலைமணி அவர்கள் 1950ஆம் ஆண்டு பிறந்து 1976ஆம் ஆண்ட ‘16 வயதிலேயே’ படம் மூலமாகக் கலை உலகில் கால் பதித்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகப் பெரிய கதை, வசனகர்த்தாவாக, இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வந்த பெருமைக்குரியவர்.
‘16 வயதினிலே’வைத் தொடர்ந்து நீயா, மங்கள வாத்தியம், எங்க ஊரு ராசாத்தி, கோபுரங்கள் சாய்வதில்லை, மண் வாசனை, மனைவி சொல்லே மந்திரம், இங்கேயும் ஒரு கங்கை, அம்பிகை நேரில் வந்தால், சிறைப் பறவை, தெற்கத்திக் கள்ளன், மல்லுவேட்டி மைனர், பாசமுள்ள பாண்டியரே, ஏழையின் சிரிப்பில் போன்ற பல படங்களுக்கும் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் சில படங்களுக்கு இயக்குநராகவும் பணியாற்றித் தன் திறமை முழுவதையும் கலை உலகிற்கு அர்ப்பணித்த என் ஆருயிர் நண்பர் கலைமணியை இறைவன் ஏனோ சீக்கிரமே அழைத்துக்கொண்டுவிட்டான்.
2012ஆம் ஆண்ட அமரர் ஆகிவிட்ட அவருக்கு என்னுடைய இந்தக் கட்டுரை ஒரு ஆத்மார்த்த காணிக்கை.
எழுத்தாளராக நான் என்றென்றும் பாராட்டுவது கள்ளம், கபடமற்ற சிரிப்போடு கலையுலகில் வலம்வந்த கலைமணியைத்தான்.