இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்துவந்த பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
லிட்டருக்கு ரூ.3-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள இந்த விலையேற்றம், வாகன ஓட்டிகளை மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார கட்டமைப்பில் தாக்கம் ஏற்படுத்தும் ஒரு சங்கிலித் தொடர் விளைவை உண்டாக்கக் கூடும் என்ற அச்சம் எழுத்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதே இந்த மாற்றத்துக்கான மிக முக்கியக் காரணமாகும்.
