தமிழ்நாடு தினம் : தியாகத்தை மறைக்கப் பார்க்கிறாரா ஸ்டாலின்?

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என (29-10-2021) அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ஏற்கெனவே நவம்பர் ஒன்றாம் தேதி அன்றுதான் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் திடீரென தமிழ்நாடு எனப் பெயர் வைத்த நாளை தமிழ்நாடு தினமாகக் கொண்டாடினால் தமிழ்நாடு நிலங்களைப் பெறப் போராடிய போராளிகளின் தியாகம் மறைக்கப்பட்டுவிடும். குழந்தை பிறந்த நாளைக் கொண்டாடுவதா? பெயர் வைத்த நாளைக் கொண்டாடுவதா? என்று குரல் எழுப்புகின்றனர் தமிழ் அறிஞர்கள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

தொல்.திருமாவளவன்

தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் “இந்த அறிவிப்புக்கு மறுப்பு  தெரிவித்துள்ளார். “தமிழ்நாடு தினம் என அறிவிப்பதற்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்து முடிவு செய்திருக்கவேண்டும்” என்று கருத்துத் தெரிவித் திருக்கிறார்.

சென்னை ராஜதானி என்று ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி செய்தனர். அப்படியிருந்தும் கூட, தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் உருவாவதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டமும், சில உயிரிழப்புகளும், தியாகங் களும் தேவைப் பட்டன என்பதே வரலாறு நமக்கு சொல்லும் உண்மையாகும்.

மொழிவாரி மாநிலங்கள் தேவையா? என்பதற்கு முதன்முதலாக எஸ்.கே.தார் கமிட்டி ஜூன் 1948-ல் அமைக்கப்பட்டது. அது தன் அறிக்கையை அதே ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. அதில், “மொழிவாரி மாநிலம் அவசியமில்லை. நிர்வாக வசதிக்கு ஏற்பத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று அது பரிந்துரைத்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இதற்காக உருவாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா என்ற மூவர் கமிட்டியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியது. 

“இந்திய சுதந்திரத்திற்காக நாம் ஒன்றுபட்டு போராடினோம். அப்படி ஒன்றுபட்ட நாம் மொழிவாரி யாக நம்மை ஏன் பிரித்துக் கொள்ளவேண்டும். மொழி உணர்வும், பிராந்திய உணர்வும் நம் ஒற்றுமையைக் குலைத்துவிடக் கூடாது. ஆகவே, இந்தியாவை நிர்வாக வசதி கருதி பிரித்து, அனைத்து பிரிவின ரும் சமஉரிமை பெறும் வகையில் மாநிலங்களை உருவாக்கலாம்” என்றார் ஜவகர்லால் நேரு.

ஜவஹர்லால் நேரு

இந்த விஷயத்தில், சட்டமேதை அம்பேத்கரோ, “மொழிவாரி மாநிலம் என்பது தவிர்க்கமுடியாது. ஆனால், அதை முரட்டுத்தனமாகவோ, நிர்ப்பந்த மாகவோ உருவாக்கக் கூடாது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிப்பதில் சில ஆபத்துகளும் உள்ளன. மொழி உணர்வை கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. பிரிவினை உணர்வை தவிர்ப்பதற்கும், மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும் ஒரு தேசிய மொழியை ஆட்சி மொழியாக்க வாய்ப்புள்ளதா என்று பார்க்கவேண்டும்.” என்றார்.

தேசத் தலைவர்களின் கருத்தும், அதைத் தொடர்ந்து தார் கமிட்டி பரிந்துரையும் தெலுங்கு பேசும் மக்களை கொந்தளிக்க வைத்தது. பெட்டி ஸ்ரீராமுலு என்ற காந்தியவாதி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 1952 ஜூன் 9-ல் ஆரம்பித்து செப்டம்பர் 15-ல் அவர் தன் உயிரை நீத்தார். அவரது உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்த மரண மும் தெலுங்கு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி, பல கலவரங்களுக்கு வித்திட்டது. கட்டுப்படுத்தவியலாத கலவரங்களையடுத்து, 1953 அக்டோபர் 1-ந்தேதி ஆந்திரா சுதந்திர இந்தியாவின் முதல் மாநிலமாக உண்டானது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பசல்அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு கமிட்டியை பிரதமர் நேரு ஏற்படுத்தினார். இச்சூழலில், “மதராஸ் மனதே” என்ற கோஷத்தை எழுப்பி, “சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும்” என்றனர், தெலுங்கு மக்கள்!

மா.பொ.சிவஞானம்

ஆந்திரா கோரிக்கைக்கும் முன்பே 1938-லேயே சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், மறைமலையடிகள், தந்தை பெரியார், சோமசுந்தரபாரதியார் ஆகியோர் “தமிழ்நாடு தமிழனுக்கே” என்ற முழக்கத்தை எழுப்பி இருந்தனர். அதே காலகட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தமிழ் மாநிலம் வேண்டும் என்று மாநாடுகள் நடத்தி வலியுறுத்தி வந்தார். ஆந்திரா உருவானதையடுத்து தமிழ்நாடு கோரிக்கையோடு சென்னையைக் காப்பாற்ற வேண்டிய அவசர அவசியமும் உண்டானது. “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்ற முழக்கத்தை ம.பொ.சி. பிரபலப்படுத்தினார். ராஜாஜியோ, “சென்னையை ஆந்திராவிற்கு தந்துவிட்டால், அதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கில்லை. நான் ராஜினாமா செய்துவிடுவேன். நீங்கள் வேறு முதல்வரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்” என்று நேருவிடம் கூறிவிட்டார். இதையடுத்து “சென்னையை ஆந்திராவிற்குத் தரப்போவதில்லை” என நேரு பகிரங்கமாக அறிவித்தார்.

மொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தெலுங்கு மக்கள் ‘விசால ஆந்திரா’ என்றும், கன்னட மக்கள் ‘அகண்ட கர்நாடகம்’ என்றும், மலையாளிகள் ‘ஐக்கிய கேரளா’ என்றும், மராட்டிய மக்கள் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்றும், குஜராத்தியினர் ‘மகா குஜராத்’ என்றும் கேட்டுப் போராடினர். மொழிவாரி மாநில அறிவிப்பு 1956 நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவானது. மற்ற மாநிலத் தவர்களுக்கு எல்லாம் அவர்கள் விரும்பிய பெயரே அந்தந்த மாநிலங்களுக்கு சூட்டப்பட்டது.

சங்கரலிங்கனார்

ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘மதராஸ்’ என்ற பெயரே மாற்றமின்றி தொடரும் என்றானது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்தது. இந்த வகையில் தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்காக விருதுநகரில் சங்கரலிங்கம் என்ற 76 வயது தமிழ்ப் போராளி 78 நாட்கள் தொடர்ந்து மனஉறுதியுடன் உண்ணா விரதமிருந்து தன் இன்னுயிரை நீத்தார். அவரது தியாகம் வீண் போகவில்லை. அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பதவியேற்று 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

அறிஞர் அண்ணா

தி.மு.க. தலைமையிலான அறிஞர் அண்ணா ஆட்சி அதிகாரத்தில் வந்ததற்குப் பிறகு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டதை அவர் தொடங்கிய தி.மு.க.வின் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் தி.மு.க. தான் எல்லாம் செய்தது என்று பிரகடனப்படுத்துவதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் அதற்காகத் தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு தினமாகக் கொண்டாட அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதைத்தான் தமிழ்ப் போராளிகள் பிறந்த நாளைக் கொண்டாடுவதா பெயர் சூட்டிய நாளைக் கொண்டாடுவதா என்று கேட்கிறார்கள். இந்தப் போராட்டம் இத்தோட நின்றுவிடவில்லை. இது எல்லைப் போராட்டமாக விரிவடைந்தது. பலர் இன்னுயிரை நீத்தனர்.

தமிழ்பேசும் மக்களுக்கான மாநிலம் என்பது உறுதியானாலும், தமிழக எல்லைப் பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்ப்பதற்கு மிகக்கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. திருவாங் கூர் ராஜ்ஜியத்தின் அங்கமாகவிருந்த கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று மார்ஷல் நேசமணி தலைமையில் தெற்கு எல்லை போராட்டம் வெகு உக்கிரமாக நடந்தது. அவருடன் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, தாணுலிங்க நாடார், காந்திராமன், குஞ்சன் நாடார், நத்தானியேல் போன்றோரும் களத்தில் இறங்கி போராடினர். கடை யடைப்பு போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தன. மக்கள் எழுச்சியுடன் போராடியதையடுத்து துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது.

இதே போல வடக்கு எல்லைகளை மீட்க ம.பொ.சி. தலைமையில் திருமலைப்பிள்ளை, கே.விநாய கம், மங்கலக்கிழார், சித்தூர் அரங்கநாதன், ந.சுப்பிரமணியன் போன்ற தளபதிகள் போராடி சிறை சென்றனர். இந்தப் போராட்டத்தில் கோவிந்தசாமி, பழனிமாணிக்கம் என்ற இரு தமிழர்கள் சிறையில் உயிர் நீத்தனர். இந்த போராட்டத்தால் 290 கிராமங்களை உள்ளடக்கிய திருத்தணியும், சித்தூர் மற்றும் புத்தூர் மாவட்டங்களின் சிறுபகுதியும் தமிழகத்திற்குக் கிடைத்தது. சும்மா கிடைக்க வில்லை தமிழ்நாடு.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...